| ADDED : ஆக 11, 2011 03:56 AM
திண்டிவனம்: காசோலை மோசடி வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த மின்துறை
அலுவலர் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த
சலவாதி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்,38. திண்டிவனம் வசந்தபுரம்
பெலாகுப்பத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் கோட்டையன். கடந்த 2006ம் ஆண்டு
மார்ச்சில், குடும்ப செலவிற்காக ஆறுமுகத்திடம் ஒரு லட்சம் ரூபாய் கடனாக
வாங்கினார்.அப்போது கோட்டையன், செங்கல்பட்டு மின்துறை அலுவலகத்தில் உதவி
பொறியாளராக பணியாற்றி வந்தார். தற்போது செஞ்சி பகுதி உதவி பொறியாளராக
உள்ளார். கடன் பணத்தை திரும்ப கொடுப்பதற்கு 2008ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி
ஒரு லட்சத்திற்கான காசோலையை ஆறுமுகத்திற்கு வழங்கினார். வங்கியில்
பணமில்லாததால், காசோலையை பயன்படுத்த வேண்டாம் என கோட்டையன் காலம் தாழ்த்தி
வந்தார்.கடந்த 2008ம் ஆண்டு மே 20ம் தேதி கரூர் வைஸ்யா வங்கியில் ஆறுமுகம் காசோலையை
டெபாசிட் செய்தார். அங்கு கோட்டையின் கணக்கில் பணம் இல்லை என்று 30ம் தேதி
காசோலை திரும்பி விட்டது.இதனால் ஆறுமுகம், வழக்கறிஞர் கணேஷ் மூலம்
கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே
கோட்டையன், விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். நேற்று முன்தினம்
திண்டிவனம் மாஜிஸ்திரேட் பிரகாஷ், கோட்டையனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து
உத்தரவிட்டார்.இதன்படி ரோஷனை இன்ஸ்பெக்டர் அறிவானந்தம், கோட்டையனை நேற்று
காலை அவரது வீட்டில் கைது செய்து, நீதிபதி பிரகாஷ் முன் ஆஜர்படுத்தினார்.