பெண் தீக்குளிக்க முயற்சி: கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
விழுப்புரம் ; விழுப்புரம் அருகே கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலக வாயிலில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் அடுத்த ஆயந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார், 38; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பேபி, 35; இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த ஜூன் மாதம் விஜயகுமார் இறந்தார்.இந்நிலையில், நேற்று காலை 11:00 மணிக்கு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு மற்றும் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பேபி, வாயில் பகுதியில் தீக்குளிக்க முயன்றார்.அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, கலெக்டரிடம் மனு அளிக்கும்படி, எச்சரித்து அனுப்பினர்.அவர் அளித்த மனு:எனது கணவர் விஜயகுமார், ஆட்டோ டிரைவராக இருந்தார். கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி ஏற்பட்ட தகராறில், அவரை சிலர் கொலை செய்து விட்டனர்.இதுகுறித்து காணை போலீசார் வழக்கு பதிந்து, குற்றவாளிகளை கைது செய்து விசாரணை செய்தனர். அதன் பிறகு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. கைதானவர்கள் ஜாமினில் வெளிவந்துள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. கணவரின் இறப்பு சான்றிதழ் கூட வழங்கவில்லை. இது குறித்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.