| ADDED : ஜூன் 27, 2024 05:44 AM
சிவகாசி : சிவகாசி சாத்துார் ரோட்டில் திரியும் மாடுகளால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் தினமும் விபத்தில் சிக்குகின்றனர். மேலும் மாடுகளும் வாகனங்களில் அடிபட வேண்டிய நிலை ஏற்படுகிறது.சிவகாசி மாநகராட்சி பகுதியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில் வேலை பார்ப்பதை தவிர பெரும்பாலானோர் பசு மாடுகள் வளர்க்கின்றனர். மாடுகளை வளர்ப்பவர்கள் பால் கறக்கும் நேரத்தில் மட்டுமே பிடித்துச் சென்று, மீண்டும் நகர் பகுதியில் விட்டுச் சென்று விடுகின்றனர். மாடுகளும் தங்கள் உணவிற்காக தெருக்கள், குடியிருப்புப் பகுதிகள், ரோட்டிலேயே நடமாடுகின்றன.நகர் முழுவதும் குறைந்தபட்சம் நுாற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் ஸ்ரீவில்லிபுத்துார் ரோடு சேர்மன் சண்முக நாடார் ரோடு, வேலாயுத ரஸ்தா , ஞான கிரி ரோடு, முண்டகன் தெரு, விஸ்வநத்தம் ரோடு, பைபாஸ் ரோடு, திருத்தங்கல் மெயின் பஜார், கருப்பசாமி கோயில், மாரியம்மன் கோயில், விருதுநகர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டிலேயே நடமாடுகின்றன. சாத்துார் ரோட்டில் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதா மாடுகள் தங்கள் உணவிற்காக ரோட்டோரத்தில் நடமாடுகின்றன.இதனால் காலையில் அவசர வேலையாக டூ வீலரில் செல்பவர்கள், சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மாடுகளால் தினமும் குறைந்தது 5 விபத்துகள் ஏற்படுகின்றது. பள்ளி மாணவர்கள் அடிக்கடி கீழே விடுகின்றனர். வாகனங்களில் செல்பவர்கள் அலாரம் அடிக்கையில் மாடுகள் தெறித்து ஓடி விபத்தை ஏற்படுத்தி விடுகின்றது. ஒரு சில மாடுகள் ரோட்டிலேயே அமர்ந்து வாகனத்திற்கு வழி விடுவதே இல்லை. பெரிய வாகனங்களில் மாடுகள் அடிபட்டும் இறக்கின்றன. கடந்த காலங்களில் மாநகராட்சி நிர்வாகம், வருவாய்த் துறையினர், போலீசார், சுகாதாரத் துறை இணைந்து ரோட்டில் திரிந்த மாடுகளை பிடித்து கோசலைக்கு அனுப்பியும், மலைவாழ் மக்களுக்கும் வழங்கினர்.மேலும் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் ரோட்டில் நடமாடும் மாடுகளின் எண்ணிக்கை குறைந்தது. ஆனால் தற்போது மீண்டும் மாடுகள் ரோட்டில் நடமாடி விபத்தினை ஏற்படுத்துகிறது. எனவே மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.