உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கவுசிகா நதியில் குப்பை கொட்டும் தொடர்கதை; தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கவுசிகா நதியில் குப்பை கொட்டும் தொடர்கதை; தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

விருதுநகர்; விருதுநகர் கவுசிகா நதியில் குப்பை கொட்டுவது தொடர் கதையாக உள்ளதால் ஆறு மாசடைந்து பாழாகி வருகிறது. இதை நகராட்சி, பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்துகின்றனர். விருதுநகருக்கு என உள்ள ஒரே ஒரு நீராதாரம் கவுசிகா நதி தான். இந்த நதியில் மழைக்காலத்தில் பெய்யும் மழை நீர் மட்டும் அடித்து வரப்படுகிறது. மற்ற காலங்களில் எப்போதும் கழிவுநீர் தான் ஓடுகிறது. பாதாள சாக்கடை பம்பிங், லிப்டிங் ஸ்டேஷன்கள் சரிவர பயன்படுத்தாததால் அதன் கழிவும் ஆற்றில் கலக்கப்படுகிறது. பொதுப்பணித்துறை ஆற்று பராமரிப்பு நடவடிக்கையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 11 ஆண்டுகளுக்கு முன் எம்.எல்.ஏ., நிதியில் கருவேலம் மட்டும் அகற்றப்பட்டது. சில மாதங்களிலே மீண்டும் கருவேலம் வந்து விட்டது. இதனால் மராமத்து செய்தும் பயனில்லாத சூழல் தான் உள்ளது. மேலும் வடமலைக்குறிச்சியில் இருந்து குல்லுார்சந்தை வரை கவுசிகா நதியில் தடுப்பணைகள் எதுவுமே இல்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் மழைநீரானது நேரடியாக குல்லுார்சந்தை அணையில் கலக்கிறது. எவ்வித பயன்பாட்டிற்கும் பயன்படுவதில்லை. இந்நிலையில் கரை ஓரங்களில் குப்பை கொட்டுவதும், கருவேலம் அடர்ந்து காணப்படுவதும் அதிகரித்தது. தற்போது கவுசிகா நதி கருவேல மரங்களாலும், குப்பை கழிவுநீராலும் சூழ்ந்துள்ளது. நாளுக்கு நாள் சுற்றியுள்ள வியாபாரிகள், அப்பகுதி மக்கள் தள்ளுவண்டிகளில் வந்து குப்பையை கொட்டி செல்கின்றனர். இதனால் சாக்கடை கழிவு போல ஆறே மாறி வருகிறது.கவுசிகா நதியில் குப்பை கொட்டுவதை தடுக்க நகராட்சி நிர்வாகமோ, பொதுப்பணித்துறையோ அல்லது மாசுக்கட்டுப்பாட்டு வாரியமோ எந்த நடவடிக்கையும் எடுத்ததே கிடையாது. குப்பை அதிகரிப்பதை தடுக்க நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதம் விதிக்க முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை