சிவகாசி: சிவகாசியில் ரோட்டில்திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.சிவகாசி மாநகராட்சி பகுதியில் மாடுகளை வளர்ப்பவர்கள் பால் கறக்கும் நேரத்தில் மட்டுமே பிடித்துச்சென்று, மீண்டும் நகர் பகுதியில் விட்டுச் சென்று விடுகின்றனர். மாடுகளும் தங்கள் உணவிற்காக தெருக்கள், குடியிருப்புப் பகுதிகள், ரோட்டிலேயே நடமாடுகின்றன. நகர் முழுவதும் குறைந்தபட்சம் நுாற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் ஸ்ரீவில்லிபுத்துார் ரோடு சேர்மன் சண்முக நாடார் ரோடு, வேலாயுத ரஸ்தா, ஞான கிரி ரோடு, முண்டகன் தெரு, விஸ்வநத்தம் ரோடு, பைபாஸ் ரோடு, திருத்தங்கல் மெயின் பஜார், கருப்பசாமி கோயில், மாரியம்மன்கோயில், விருதுநகர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டிலேயே நடமாடுகின்றன. இதனால் டூவீலரில் செல்பவர்கள், சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். ஒரு சில மாடுகள் ரோட்டிலேயே அமர்ந்து வாகனத்திற்கு வழி விடுவதே இல்லை. அதே சமயத்தில் பெரிய வாகனங்களில் மாடுகள் அடிபட்டும் இறக்கின்றன. கடந்த காலங்களில் மாநகராட்சி நிர்வாகம், வருவாய்த் துறையினர், போலீசார், சுகாதாரத் துறை இணைந்து ரோட்டில் திரிந்த மாடுகளை பிடித்து கோசாலைக்கு அனுப்பியும், மலைவாழ் மக்களுக்கும் வழங்கினர். மேலும் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் ரோட்டில் நடமாடும் மாடுகளின் எண்ணிக்கை குறைந்தது.ஆனால் தற்போது மீண்டும் மாடுகள் ரோட்டில் நடமாடி விபத்தினை ஏற்படுத்துகிறது. எனவே மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், காமராஜர் ரோடு, திருத்தங்கல் ரோடு, வேலாயுரஸ்தா பகுதியில் ரோட்டில் திரிந்த மூன்று மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு தலா ரூ. 2000 அபராதம் விதிக்கப்பட்டது. கமிஷனர் கூறுகையில், தற்போது முதல் முறை என்பதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ரோட்டில் நடமாடினால் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாடுகள்கோசாலையில் ஒப்படைக்கப்படும், என்றார்.