| ADDED : ஜூலை 05, 2024 04:24 AM
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை, கூட்டுறவுத்துறை கட்டடங்களின் கூரை, துாண்கள் பிளந்து நாளுக்கு நாள் சேதம் அதிகரித்து வருகிறது.விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்திலே ரூ.70.57 கோடிக்கு புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் அஞ்சலகம், முதல் தளத்தில் குற்ற வழக்கு புலனாய்த்துறை, 2ம் தளத்தில் டி.ஆர்.ஓ., கலெக்டர் அறைகள், 3ம் தளத்தில் வருவாய்பிரிவுகள், அடுத்தடுத்த தளங்களில் பல்வேறுதுறைகள், 6ம் தளத்தில் அவசர கட்டுபாட்டு அறைகள் அமைகின்றன.இதற்கான பணிகள் முடிந்து விட்டன. தற்போது நுழைவு வாயில் கட்டும் பணியும், வளாகத்தரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் இக்கட்டடம் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இப்புதிய கட்டடம் திறக்கப்பட்ட பின் தற்போது செயல்படும் கலெக்டர் அலுவலகத்தில் அறைகள் காலியாகும். அந்த இடத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை கட்டடத்தில் உள்ள கூட்டுறவுத்துறை அலுவலகங்கள், சுகாதாரத்துறை அலுவலகங்கள் மாற்றப்பட வாய்ப்புள்ளது.இந்நிலையில் நாளுக்கு நாள் பள்ளிக்கல்வித்துறை கட்டட துாண்களில் விரிசல் அதிகரித்துவருகிறது. கூரைகள் பிளந்துள்ளன. எப்போது வேண்டுமானால் விழுந்து விடும் சூழல் உள்ளது. இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் குறுக்கே செல்லும் வழித்தடத்தை பயன்படுத்தாமல் நேரடியாக படிக்கட்டுகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர். பள்ளிக்கல்வித்துறையில் இருந்து புள்ளியியல் துறைக்கோ, நில அளவைத்துறையில் இருந்து கூட்டுறவுத்துறைக்கோ வரும் வழியை பயன்படுத்த அச்சப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதை சரி செய்ய வேண்டும். இந்த கட்டடத்தின் உறுதி தன்மையை ஆராய வேண்டும். விரைந்து புதிய கட்டடத்தை செயல்படுத்தினால் மட்டுமே இந்த கட்டடம் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு புதிய கலெக்டர் அலுவலகத்தை விரைந்து திறக்கவும், பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களை இடமாற்றம் செய்யவும் துரிதப்படுத்த வேண்டும்.