| ADDED : ஜன 18, 2024 05:32 AM
விருதுநகர்: கழிவு நீர், ஆகாயத்தாமரை, உரசெடிகள், தொழிற்சாலை கழிவால் வீரசெல்லையாபுரம் கண்மாய் பாதிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.இக்கண்மாய் 70 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 100 ஏக்கர் பாசன வசதி கொண்ட கண்மாய் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயத்திற்கு பயன்பட்டது. இதற்கு அழகாட்டு, ஆராய்ச்சி, கரிசல் காடு, மூளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் ஒடைகளில் இருந்து நீர் வருவதால் ஆண்டு முழுவதும் கண்மாயில் நீர் வற்றாமல் இருந்து வருகிறது. கண்மாயினை நம்பி நெல், கம்பு, சோளம் பயிரிட்டு விவசாயம் செய்கின்றனர். கண்மாய் அமைந்துள்ள பகுதிகளுக்கும், அதனை சுற்றியுள்ள வடுக்கப்பட்டி, வள்ளியூர் பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.கண்மாய்க்கு நீர் வரக்கூடிய ஒடைகள் அருகே அமைந்துள்ள தனியார் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுகள் ஒடைகளில் கலக்கிறது. இதனால் நீரின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டு குளிப்பவர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்படுகிறது. இதனால் கண்மாயில் குளிப்பதற்கே மக்கள் அஞ்சுகின்றனர்.ஊரகப்பகுதிகளில் வாறுகால் கழிவு நீர் நேரடியாக கண்மாய்க்கு வரக்கூடிய நீர்வரத்து ஒடைகளில் கலக்கிறது. இதனால் ஆகாயத்தாமரை, உரச்செடிகள் அதிகளவில் வளர்ந்து உள்ளது.கண்மாய் கரைகளில் கற்கள் பதிக்கப்பட்டு வலுவானதாக இருந்தது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிக நீர் வந்ததால் கரை உடைந்து விளைநிலங்கள் பாழானாது. இதனால் 2023 இறுதியில் கரைகளை பலப்படுத்துவதற்காக கிராவல் மண் கொண்டு பணிகள் நடந்தது. ஆனால் இந்த பணிகளால் கரையின் அகலத்தை குறைந்து விட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பணிகள் முறையாக முடிக்கப்படாமல் நிறைவு செய்யப்பட்டது.கண்மாயில் இருந்து நீர் மறுகால் பாய்ந்து வெளியேறும் வசதி உள்ளது. குடிமராமத்து பணிகளை முறையாக செய்யாததால் 4 மதகுகளும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இதன் உள்ளே குடிநீருக்காக அமைக்கப்பட்ட கிணறும் சரியான பராமரிப்பு இல்லாததால் இடிந்து மூடிய நிலையில் உள்ளது. எனவே கண்மாய்க்கு வரும் நீர்வரத்து ஒடைகளில் தொழிற்சாலை, வாறுகால் கழிவு நீர் கலப்பதை தடுத்து, முறையாக துார்வாரி, கரைகளை பலப்படுத்தி, குடிநீர் ஆதாரமாக விளங்கும் கண்மாயை காக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.