ஆறு ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத சமுதாயக்கூடம்: மக்கள் அதிருப்தி
சிவகாசி : திருத்தங்கல் கவிதா நகரில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயக்கூடம் கட்டப்பட்டும் இதுவரையிலும் பயன்பாட்டிற்கு வராததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். திருத்தங்கல் கவிதா நகரில் பட்டாசு தொழிலாளர்கள், கூலித் தொழிலாளிகள், அதிகமானோர் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் வீட்டு விசேஷங்களை நடத்துவதற்கு மண்டபம் இல்லாமல் சிரமப்பட்டனர். எனவே எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 30 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. இதனால் இப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் கட்டப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆகியும் இதுவரையிலும் சமுதாயக்கூடம் பயன்பாட்டிற்கு வரவில்லை. கட்டடம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. இப்பகுதி மக்கள் வேறு வழியின்றி அதிக வாடகை கொடுத்து தனியார் மண்டபங்களில் விசேஷங்களை நடத்துகின்றனர். கட்டடம் சேதம் அடைந்து பயனற்றதாக மாறிவிடுவதற்கு முன்பு மின்சாரம், தண்ணீர் வசதி ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.