| ADDED : ஜன 26, 2024 04:59 AM
சிவகாசி: சிவகாசி இரட்டை பாலம் விலக்கிலிருந்து கட்டளைப்பட்டி ரோட்டில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் தினமும் விபத்தில் சிக்குகின்றனர்.சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில் வேலை பார்ப்பதை தவிர பெரும்பாலானோர் பசு மாடுகள் வளர்க்கின்றனர். மாடுகளை வளர்ப்பவர்கள் பால் கறக்கும் நேரத்தில் மட்டுமே பிடித்துச் சென்று, மீண்டும் நகர் பகுதியில் விட்டுச் சென்று விடுகின்றனர். மாடுகளும் தங்கள் உணவிற்காக தெருக்கள், குடியிருப்புப் பகுதிகள், ரோட்டிலேயே நடமாடுகின்றன.சிவகாசி இரட்டைப் பாலம் விலக்கிலிருந்து கட்டளை பட்டி செல்லும் ரோட்டில் மாடுகள் உணவிற்காக ரோட்டிலேயே நடமாடுகின்றன. இதனால் காலையில் அவசர வேலையாக டூ வீலரில் செல்பவர்கள், சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். வாகனங்களில் செல்பவர்கள் அலாரம் அடிக்கையில் மாடுகள் தெறித்து ஓடி விபத்தை ஏற்படுத்தி விடுகின்றது. ஒரு சில மாடுகள் ரோட்டிலேயே நின்று வாகனத்திற்கு வழி விடுவதே இல்லை.சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி மாணவர் ஒருவர் மாடு குறுக்கே வந்ததால் விபத்தில் பலியானார். இதனைத் தொடர்ந்து அப்போதைய கமிஷனர் சங்கரன் மாடுகளை பிடிப்பதற்காக பறக்கும்படை அமைத்தார். இக்குழுவினர் ரோட்டில் திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனார் .ஆனால் இப்போது பறக்கும் படை செயல்பாட்டில் இல்லை. மேலும் கடந்த காலங்களில் மாநகராட்சி நிர்வாகம், வருவாய்த் துறையினர், போலீசார், சுகாதாரத் துறை இணைந்து ரோட்டில் திரிந்த மாடுகளை பிடித்து கோசலைக்கு அனுப்பியும் , மலைவாழ் மக்களுக்கும் வழங்கினர். மேலும் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.இதனால் ரோட்டில் நடமாடும் மாடுகளின் எண்ணிக்கை குறைந்தது. ஆனால் தற்போது மீண்டும் மாடுகள் ரோட்டில் நடமாடி விபத்தினை ஏற்படுத்துகிறது. எனவே மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.