ஆமை வேகத்தில் வாறுகால் பணிகள் வீடுகளுக்கு செல்வதில் சிரமம்
ராஜபாளையம்: மழைக்காலத்தில் தொடங்கி வாறுகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் ஒரு மாதமாக மக்கள் வீடுகளுக்கும் கடைகளுக்குள் நுழைய சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ராஜபாளையம் நகராட்சி 8 வது வார்டு 60 அடி ரோட்டில் தெற்கு பகுதியில் முறையான வடிகால் இன்றி கழிவு நீர் மழைக்காலங்களில் தேங்கி நின்றது. இதனை அடுத்து கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டம் சார்பில் நகராட்சியில் ஏற்கனவே நான்கு இடங்களில் கழிவுநீர் கால்வாய் மழைநீர் வடிகால் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதன்படி 60 அடி ரோட்டில் இருந்து மாடசாமி கோயில் மெயின் தெரு சந்திப்பு வரை 6 அடி ஆழத்திற்கு அதே அளவு அகலத்தில் ஒரு மாதம் முன்பு தோண்டப்பட்ட நிலையில் பலத்த மழையால் பணிகள் நின்றது. தற்போது வரை முழுமை அடையாத நிலையில் தோண்டப்பட்ட பள்ளங்களினால் வீடுகளுக்குள் நுழையவும், வணிக கடைகளுக்கு வாகனங்கள் செல்லவும் முடியாமல் உள்ளது. தற்காலிகமாக பலகைகள் வைத்து குழந்தைகள் முதியவர்கள் வீடுகளுக்குள் செல்ல தடுமாறி வருகின்றனர். மழைக்கு முன்பு பணிகள் தொடங்கி முடிக்க வேண்டிய நிலையில் விரைவு படுத்த வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.