| ADDED : டிச 08, 2025 05:41 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, ராஜபாளையத்தில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் செயல்படுகிறது. இதே போல விருதுநகரிலும் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையம் திறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் தெருக்கள், ரோடுகளில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் விளையாடும் குழந்தைகள், நடந்து செல்லும் வயதானவர்கள் என பலர் தினமும் நாய்களால் கடிபடுவது தொடர் கதையாக மாறிவிட்டது. தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, மூன்று நாட்கள் தொடர்ந்து பராமரித்து, வெளியே விட வேண்டும் என்ற விதி உள்ளது. அரசு கால்நடை மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய தயாராக உள்ளனர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின் நாய்களை தொடர்ந்து பராமரிக்கும் வசதிகள் இல்லை. நாய் பிடிப்பு, ஏ.பி.சி., மையத்தில் சேர்க்கை, பிடிப்பட்ட இடங்களிலிருந்து இடமாற்றம் செய்ய ஒரு நாய்க்கு ரூ. 200, மருந்துகள், உணவு உட்பட அறுவை சிகிச்சைக்கு முந்தைய பராமரிப்பு, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்புக்கு ஒரு நாய்க்கு ரூ. 1450 மத்திய அரசால் வழங்கப்படுகிறது. தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மாநில அரசு செயல்படுவதில் சிரமம் ஏற்பட்டதால் தொய்வு நிலை உண்டாகியது. இதை நிவர்த்தி செய்து தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநகராட்சி பகுதிகளில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு சிவகாசியில் திறக்கப்பட்டது. மேலும் ராஜபாளையம் நகராட்சியிலும் இனக்கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டு தொடர்ந்து செயல்படுகிறது. ஆனால் மாவட்ட தலைநகரமான விருதுநகரில் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கான நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையம் திறக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அரசு மருத்துவமனை வளாகம், அரசு அலுவலக வளாகங்களில் கூட தெருநாய்கள் இனப்பெருக்கும் செய்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன. எனவே விருதுநகர் நகராட்சி பகுதியில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையம் திறக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.