உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மேம்பாலம் இல்லாததால் அடிக்கடி நடக்கும் விபத்து

மேம்பாலம் இல்லாததால் அடிக்கடி நடக்கும் விபத்து

காரியாபட்டி; மதுரை தூத்துக்குடி நான்கு வழிச் சாலை மல்லாங்கிணர் பிரிவு ரோட்டில் மேம்பாலம் இல்லாததால் அடிக்கடி நடக்கும் விபத்தால் ரோட்டை கடக்க அச்சம், தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை தாராளம், மிகப் பழமையான கட்டடத்தை அப்புறப்படுத்தாததால் விபத்து அச்சம் என மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர். மல்லாங்கிணர் பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலிதீன், புகையிலை, பான் பராக், குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை தாராளமாக நடைபெற்று வருகிறது. அவ்வப்போது சோதனை நடைபெற்றாலும் கண்ணில் மண்ணை தூவி, தொடர்ந்து விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. மிகப் பழமையான கூட்டுறவு சங்க கட்டடம் ஆபத்தான நிலையில் உள்ளது. எப்போது இடிந்து விழுமோ என்கிற நிலையில், விபத்து அச்சம் இருப்பதால் அப்பகுதியில் மக்கள் நடமாட அச்சப்படுகின்றனர். இதனை அப்புறப்படுத்த பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. வீதிகளில் பேவர் பிளாக் கற்கள் சேதமடைந்துள்ளன. ஆட்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். இடறி விழுகின்றனர். வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. டயர்களை பதம் பார்க்கிறது. மதுரை துாத்துக்குடி நான்கு வழிச் சாலையில் மல்லாங்கிணர் பிரிவு ரோட்டில் ரோட்டை கடக்க முயன்ற பலர் விபத்தில் சிக்கி பலியாகினர். பலர் காயமடைந்து உடல் ஊனத்துடன் உள்ளனர். மேம்பாலம் கட்ட வலியுறுத்தி பலமுறை மனு கொடுத்தும், போராட்டம் நடத்தியும் நடவடிக்கை இல்லை. அப்பகுதியை கடக்க மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடை பொருட்கள் விற்பனை தாராளம்

முருகேசன், தனியார் ஊழியர்: அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலித்தீன், புகையிலை, குட்கா, பான் பராக், உள்ளிட்ட பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இளைஞர்கள் ஏராளமானோர் வாங்கி பயன்படுத்தி வருவதால் தவறான வழியில் செல்ல வாய்ப்பு உள்ளது. அவ்வப்போது ஆய்வு செய்கின்றனர். அதையும் மீறி தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இடியும் நிலையில் கட்டடம்

ஜெயமணி, தனியார் ஊழியர்: 50 ஆண்டுகள் பழமையான கூட்டுறவு சங்க கட்டடம் உள்ளது. விஷ பூச்சிகள் அடைந்து வருகின்றன. அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இருப்பதால் எப்போது இடிந்து விழுமோ என்கிற அச்சம் உள்ளது. பலமுறை அப்புறப்படுத்த வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. விபத்திற்கு முன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடருது விபத்து

வில்லியம்ஸ், தனியார் ஊழியர்: மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலை மல்லாங்கிணர் பிரிவு ரோட்டில் ரோட்டை கடக்க முயன்ற பலர் விபத்தில் சிக்கினர். இதுவரை 36 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்து உடல் ஊனத்துடன் உள்ளனர். மேம்பாலம் கட்ட பலமுறை வலியுறுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் விபத்து ஏற்பட்டு பலர் பலியாகும் முன் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை