சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் குடியிருப்பு பகுதியில் நகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.தேசிய பசுமை ஆணைய உத்தரவின் படி, நீராதாரப் பகுதிகளில் குடியிருப்பு கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வகையில் மாநிலத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூரிலும், ரூ.25 கோடி மதிப்பில், ஒரு ஏக்கர் பரப்பளவில் மடவார்களாகம் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு அளிக்க நேற்று காலை நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது நகராட்சி தலைவர் மற்றும் ஆணையர் அலுவலகத்தில் இல்லாததால், போர்டிகோவில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் நகராட்சி பொறியாளர் கோமதி சங்கர் மக்களிடம் கோரிக்கை மனுவை பெற்றார்.