மதுரை மத்திய சிறையில் இருந்த கொலை வழக்கு சிறைவாசி மாயம்
ஸ்ரீவில்லிபுத்துார் : கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் இருந்த சிறைவாசி ஸ்ரீவில்லிபுத்துார் முத்துகிருஷ்ணன் 45, விடுமுறையில் ஊருக்கு வந்தநிலையில் மீண்டும் சிறைக்கு திரும்பாமல் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அத்திகுளத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் 45. கூலித் தொழிலாளி. இவர் 2000ல் ராஜபாளையத்தில் உறவினர் ஒருவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வந்தார். இந்நிலையில் தனது தந்தை சீதாராமனுக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் அவரைப் பார்த்து வருவதற்கு 6 நாட்கள் அவசர கால லீவு எடுத்து ஜூலை 24 அன்று மதுரை மத்திய சிறையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்துள்ளார். ஜூலை 31 அன்று மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டிய முத்துகிருஷ்ணன் சிறைக்கு வராமல் மாயமானார். மதுரை மத்திய சிறை அலுவலர் ராஜேஷ் கண்ணா புகாரில் ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.