நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களால் அரசு மருத்துவமனையில் எக்கோ இல்லை உள், வெளி நோயாளிகள் பரிதவிப்பு
விருதுநகர்: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களால் நேற்று விருதுநகர் அரசு மருத்துவமனையில் எக்கோ பரிசோதனை முழுவதுமாக செயல்படாமல் பூட்டி கிடந்தது. இதனால் உள், வெளி நோயாளிகள் பரிசோதனை செய்து கொள்ள முடியாமல் பரிதவித்தனர். விருதுநகர் அரசு மருத்துவமனை முதல் தளத்தில் இதயம் தொடர்பான பிரச்னைகளை கண்டறிய எக்கோ பரிசோதனை செயல்படுகிறது. இங்கு உள், வெளி நேயாளிகளாக ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்டோர் வந்து பரிசோதனை செய்து, அதற்கு ஏற்ப சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதனால் காலை முதல் மதியம் வரை கூட்டம் நிறைந்த இடமாக இருக்கும். நேற்று வெம்பக்கோட்டை அருகே ஆலங்குளத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடந்தது. இது போன்று ஒவ்வொரு வாரமும் நடக்கும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் நோயாளிகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையின் எக்கோ பரிசோதனை எடுக்கும் டாக்டர் செல்வது வழக்கம். இதனால் மருத்துவமனை பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க நிர்வாகத்தினர், அரசு மருத்துவமனையில் அன்றைய தினம் நோயாளிகளுக்கு எக்கோ பரிசோதனையை வேறொரு டாக்டர் எடுத்து முடிவுகளை வழங்க ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆனால் நேற்று வழக்கம் போல நலம் காக்கும் ஸ்டாலின் முகாமிற்கு மருத்துவர் சென்று விட்டதால் மாற்றாக வர வேண்டிய டாக்டர் இல்லாததால் எக்கோ பரிசோதனை முழுவதுமாக எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் உள் நோயாளிகள், தேதி பதிவு செய்து இரண்டு, மூன்று நாட்கள் காத்திருந்து பரிசோதனை எடுப்பதற்காக வந்த வெளி நோயாளிகளும் பாதிக்கப்பட்டனர். எனவே அரசு மருத்துவமனையில் எக்கோ பரிசோதனை தொடர்ந்து செயல்படவும், நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கையை மருத்துவமனை நிர்வாகம் எடுக்க வேண்டும்.