பொங்கலுக்கு வழங்க 22.50 லட்சம் இலவச சேலைகள் உற்பத்தி இலக்கு
விருதுநகர்: பொங்கலுக்கு வழங்க 22.50 லட்சம் இலவச சேலைகளை உற்பத்தி செய்து வழங்க விருதுநகர் மாவட்ட நெசவாளர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளன.தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலைகள் ரேஷன்கார்டுதாரர்கள், அந்தியோதயா அன்ன யோஜனா திட்ட பயனாளிகள், விதவைகள், ஆதரவற்றோருக்கு வழங்கப்படுகிறது.2025 பொங்கல் பண்டிகைக்கு வழங்க 22.50 லட்சம் இலவச சேலைகள் உற்பத்தி செய்யும் பணி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 29 நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் 6 ஆயிரம் உறுப்பினர்களுக்கு நடப்பாண்டு தொடர் பணியாக வழங்கப்பட்டது. தற்போது இலவச சேலைகள் நெய்யும் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளன.இம்மாதத்திற்குள் பணிகளை விரைந்து முடிப்பதற்காக நெசவாளர்கள் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். உற்பத்தி செய்யப்படும் இலவச சேலைகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பப்பட்டு மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படவுள்ளது.