சமூக நலத்துறை அலுவலர் லஞ்சம் வாங்கியதாக வீடியோ
ராஜபாளையம்; ராஜபாளையம் சமூக நலத்திட்ட விரிவாக்க அலுவலர், பொதுமக்களிடம் பணம் வாங்கியதாக வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறைக்கு தனி அலுவலகம் உள்ளது. இங்கு மம்சாபுரம் அருகே இடையன்குளத்தை சேர்ந்த மேக்தா மேரி சமூக நலத்துறை விரிவாக்க அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் சமூக நலத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வரும் பயனாளர்களிடம் பணம் பெறுவதாக வீடியோ ஒன்று நேற்று வெளியானது. இது குறித்து விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலர் ஷீலா சுந்தரி கூறும்போது, வீடியோ குறித்து சமூக நலத்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேக்தா மேரி அளித்த விளக்கம் குறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர் என்றார். பணம் வாங்கியதை வீடியோ பதிவு செய்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.