| ADDED : ஆக 05, 2011 10:01 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி கிராமங்களுக்கு டிக்கெட்
முறையில் பயணிகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்களால் விபத்துக்கள் ஏற்படும் நிலை
உள்ளது.ஸ்ரீவில்லிபுத்தூரில் மினி பஸ்களுக்கு போட்டியாக, ஆட்டோக்களில் டிக்கெட்
முறையில்அதிகளவில் பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் மினி பஸ்களை இயக்க
முடியாத நிலை உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து பெருமாள்தேவன்பட்டி
உள்ளிட்ட கிராமங்களுக்கு இயக்கப்படும் மினி பஸ்களுக்கு போட்டியாக ,
ஆட்டோக்களில் டிக்கெட் முறையில் பயணிகளை ஏற்றி செல்கின்றனர். மினி பஸ்கள்
செல்லும் சில நிமிடங்களுக்கு முன்பாக புறப்படும் இந்த ஆட்டோக்களில்
அதிகபட்சமாக 15 பேர் வரை ஏற்றி செல்கின்றனர். இதனால் மினி பஸ்களில் வசூல்
குறைந்து, அதன் உரிமையாளர்கள் மினி பஸ்களை விற்பனை செய்யும் சூழ்நிலை
நிலவுகிறது. மேலும் பயணிகளை அதிகளவில் ஏற்றி செல்லும் ஆட்டோக்களால் விபத்து
அபாயமும் உள்ளது. மினி பஸ் உரிமையாளர் ஒருவர் கூறுகையில்,'' மினி பஸ்களில்
பள்ளி, திருமண நாட்களில் மட்டும் ஓரளவு கலெக்ஷன் வரும் . மற்ற நாட்களில்
நஷ்டம் தான்.மினி பஸ் புறப்படும் நேரத்திற்கு முன் ஆட்டோக்களை நிறுத்தி 5
ரூபாய் கட்டணம் வீதம் 15 முதல்17 பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால்
வெறும் பஸ்களை இயக்க வேண்டி உள்ளது. டீசல் விலை உயர்வாலும் கூடுதல் கட்டணம்
வசூலிக்க முடிவதில்லை. ஊழியர்களின் சம்பளம் போன்றவைகளால் மினி பஸ்சை
தொடர்ந்து இயக்க முடியாத நிலை உள்ளது. இதனால் மினி பஸ் இயக்குவதையே
நிறுத்தி விட்டோம் . ஆட்டோக்கள் குறித்து அதிகாரிகளிடம் கூறினால்,
நடவடிக்கை எடுக்கும் ஒரு சில தினங்களில் மட்டும் ஆட்டோக்கள் வருவதில்லை.
இதன் பின் பழைய படி பயணிகளை ஏற்றி செல்கின்றனர்,'' என்றார்.