தண்ணீர் இல்லாமல் பரிதவிக்கும் ரயில் பயணிகள்:டிக்கெட் பரிசோதகர்களுடன் தினசரி வாக்குவாதம்
சென்னை:சென்னையில் இருந்து, தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் நீண்டதூர ரயில்களில், சரிவர தண்ணீர் நிரப்பப்படாததால், பயணிகள், துர்நாற்றத்துடன் ரயிலில் பயணிக்க வேண்டியுள்ளது. இது தொடர்பாக, தினசரி, பயணிகளுக்கும், டிக்கெட் பரிசோதகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, தென்மாவட்டங்களுக்கு புறப்படும் ரயில்களில், கழிவறை தொட்டியில் குறைந்தளவு தண்ணீர் நிரப்புகின்றனர் அல்லது நிரப்புவதே இல்லை. இதனால், ரயில் புறப்பட்டதும், கழிவறை பயன்படுத்துபவர்கள், தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். இதனால், துர்நாற்றம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் துர்நாற்றம், பெட்டி முழுவதும் பரவி, பயணிகளை அவதிக்குள்ளாக்குகிறது.இது குறித்து, கன்னியாகுமரியைச் சேர்ந்த சுந்தர் என்ற பயணி கூறியதாவது:தொழில் நிமித்தமாக அடிக்கடி சென்னைக்கு வந்து செல்கிறேன். பெரும்பாலும், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கிறேன். ஆனால், இந்த ரயிலில், ஊழியர்கள் சரிவர தண்ணீர் நிரப்புவதில்லை. இதனால், கழிவறையை பயன்படுத்த முடியவில்லை.கடந்த 1ம் தேதி கூட, இந்த ரயிலில் தண்ணீர் இல்லை. இது குறித்து டிக்கெட் பரிசோதகர்களிடம் புகார் செய்தோம். விழுப்புரம் ரயில் நிலையத்தில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்வதாகக் கூறி, அவ்வாறே செய்தார்.ஏதோ ஒரு சிலர் மட்டுமே தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்கின்றனர். பெரும்பாலான சமயங்களில் டிக்கெட் பரிசோதகர், 'நாங்கள் என்ன செய்வது; அதிகாரிகளிடம் புகார் தெரிவியுங்கள்' என கூறுகின்றனர். மேலும், 'ஏசி' பெட்டிகளில் படுக்கை விரிப்புகளை முறையாக வினியோகிப்பதில்லை. சில நேரங்களில், ஊழியர்களே வருவதில்லை.இவ்வாறு சுந்தர் கூறினார்.பயணிகள் குறைகள் குறித்து பெயர் கூற விரும்பாத டிக்கெட் பரிசோதகர் கூறும்போது, ''எழும்பூர் ரயில் நிலையத்தில், ரயில் 12 மணி நேரம் நிற்கிறது. ஆனால், ஊழியர்கள் தண்ணீர் நிரப்புவதில் அக்கறை காட்டுவதில்லை. தினசரி, எங்களுக்கும், பயணிகளுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால், கன்னியாகுமரி ரயிலில் பணி என்றாலே, பலர் விடுப்பு எடுத்துக் கொள்கின்றனர்,'' என்றார்.ரயில்வே விளக்கம்: இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ''பொதுவாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்திலும், காலையிலேயே தண்ணீர் நிரப்பி விடுவோம். சில நேரங்களில், மின்சார தடை காரணமாக தண்ணீர் ஏற்றுவதில் காலதாமதம் ஏற்படுகிறது,'' என்றார்.