சென்னை:'சென்னை ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில், மாவட்ட கலெக்டருக்கு உள்ள அதிகாரத்தின்படி, ஆவணங்களின் அடிப்படையில், தோட்டக்கலை சங்கத்துக்கே நிலம் சொந்தமானது என உத்தரவிட்டதற்கு, உண்மைக்கு புறம்பான காரணங்களை கற்பிப்பது ஏற்புடையது அல்ல' என, சென்னை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.தோட்டக்கலை சங்கத்துக்கு அரசு நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறிய குற்றச்சாட்டுக்கு, சென்னை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) அண்ணாமலை அளித்துள்ள விளக்கம்:அக்ரி - ஹார்டிக்கல்சுரல் சொசைட்டி தன் அனுபவத்தில் வைத்திருந்த நிலத்தை, கடந்த டிசம்பர் 15ம் தேதிக்குள் காலி செய்யும்படி, சென்னை மாவட்ட கலெக்டர் கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதை எதிர்த்து, தோட்டக்கலை சங்கம், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து, இடைக்கால தடை உத்தரவு பெற்றது.இதன்பின், ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில், மாவட்ட கலெக்டர் அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டது. அந்த சங்கம் கூடுதல் வாக்குமூலம் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய உரிமை உள்ளதாக தெரிவித்தது. இதனடிப்படையில், சம்பந்தப்பட்ட சங்கத்துக்கு வாய்ப்பு வழங்கி, நிலம் யாருக்கு சொந்தம் என்பதற்கான இறுதி உத்தரவு பிறப்பிக்க, ஐகோர்ட் உத்தரவிட்டது.அந்த சங்கத்தின் கவுரவ செயலர் என் முன் ஆஜராகி, விரிவான வாக்குமூலம் தாக்கல் செய்ததுடன், ஆவணங்களையும் சமர்ப்பித்தார். அவை, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களுடன் சரிபார்க்கப்பட்டு, அவை உண்மைத்தன்மை வாய்ந்தவை என உறுதி செய்யப்பட்டது.கலெக்டர் அலுவலக கோப்புகளை பரிசீலித்ததில், 1877ல், சென்னை துணை கலெக்டர், மாவட்ட கலெக்டருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இரண்டு துண்டு நிலங்களின் சரியான விஸ்தீரணங்கள், முறையே மூன்று காணி, 16 கிரவுண்டு 2,027 சதுர அடி மற்றும் 8 கிரவுண்டு, 1,200 சதுர அடி எனவும், இந்த நிலங்கள் முழுமையாக, அக்ரி - ஹார்டிகல்சுரல் கார்டன் தன் விரிவாக்கத்துக்காக, தனி நபர் பேச்சுவார்த்தை மூலம் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலம், தோட்டக்கலை சங்கம் தன் பல்வேறு வணிக செயல்பாடுகள் மூலம் பெற்ற நிதியின் மூலம் வாங்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் உள்ளது. இச்சங்கத்தின் நிலங்களை கைப்பற்ற, 1989ல் பிறப்பித்த அரசாணையில் குறிப்பிடவில்லை.இவற்றை ஆராய்ந்து, சென்னை ஐகோர்ட் வழக்கறிஞரின் கருத்துரையும் பெறப்பட்டு, 4 காணி, 18 கிரவுண்டு, 1,683 சதுர அடி நிலத்துக்கான உரிமை, தோட்டக்கலை சங்கத்துக்கே உரியது என உறுதி செய்து உத்தரவிட்டேன்.ஐகோர்ட் உத்தரவுப்படி, மாவட்ட கலெக்டருக்கு உள்ள அதிகாரத்தின்படி, ஆவணங்களின் அடிப்படையில் நான் வழங்கிய உத்தரவுக்கு, உண்மைக்குப் புறம்பான காரணங்களை கற்பிப்பது ஏற்புடையது அல்ல.இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.