| ADDED : ஜூலை 26, 2024 08:06 PM
சென்னை:தகவல் உரிமை சட் டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மூன்று ஆண்டுகளுக்கு பின் பதிலளித்ததால், மனுதாரருக்கு, 10,000 ரூபாய் இழப்பீடு வழங்க, தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் எம்.காசிமாயன். இவர் அப்பகுதியில், தனியார் நிறுவனம் சார்பில் விதிகள் மீறி அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளதாக கூறி, அது தொடர்பான தகவல்களை அளிக்கும்படி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் பொது தகவல் அலுவலரிடம், தகவல் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.கடந்த 2021ல் கேட்கப்பட்ட கேள்விக்கு, கடந்த மார்ச் 28ம் தேதி தான் பதில் அளிக்கப்பட்டது. இதனால், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில், மனுதாரர் காசிமாயன் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த மாநில தலைமை தகவல் ஆணையர் முகம்மது ஷகீல் அதர், 'தகவல் உரிமை சட்டத்தில் கேட்கப்படும் கேள்விக்கு, ஒரு மாதத்தில் பதில் அளிக்க வேண்டும். தாமதமாக பதில் அளிக்கப்பட்டதால், மனுதாரருக்கு, 10,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளார்.