4 அடுக்குமாடி திட்டங்களுக்கு மறு மதிப்பீடுக்கு குழு அமைப்பு
சென்னை: சென்னை மற்றும் ஈரோட்டில் அறிவிக்கப்பட்ட, நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மறு மதிப்பீடு அறிக்கை அளிக்க, உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவை, வீட்டுவசதி வாரியம் அமைத்துஉள்ளது.ஈரோடு மாவட்டம் சம்பத் நகரில், 40.60 கோடி ரூபாயில், 108 வீடுகள் உடைய அடுக்குமாடி குடியிருப்பு திட்டம், 2022ல் அறிவிக்கப்பட்டது.இதே போன்று, சென்னையில் மயிலாப்பூர், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் பகுதிகளில் பழைய கட்டடங்களை இடித்து, புதிய அடுக்குமாடி திட்டங்கள் செயல்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு, 2023ல் வாரிய நிர்வாக குழு ஒப்புதல் அளித்தது.கட்டுமான பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இத்திட்டங்களுக்கு ஒப்பந்ததாரர்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இத்திட்டங்கள் அறிவிப்பு நிலையிலேயே முடங்கும் சூழல் உருவானது. இதுகுறித்து, வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த 2022ல் அறிவிக்கப்பட்ட இத்திட்டங்களுக்கு மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என, அரசிடம் அனுமதி கோரப்பட்டது. தற்போதைய நிலவரம் அடிப்படையில், இத்திட்டங்களுக்கு மறு மதிப்பீட்டு அறிக்கை அளிக்க, உயர் நிலை குழு அமைக்கப்பட உள்ளது. இதன்படி, நிதித்துறை இணை செயலர், நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., பிரதிநிதி, பொதுப்பணித் துறையின் முதன்மை தலைமை பொறியாளர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை பொறியாளர், வீட்டுவசதி வாரிய தலைமை பொறியாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடர் நடவடிக்கை எடுக்க, வாரிய நிர்வாக இயக்குனருக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.