புதுச்சேரியில் இருந்து கடத்திய 822 மது பாட்டில்கள் பறிமுதல்
பொள்ளாச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களால் தமிழகம் முழுதும் மதுவிலக்கு போலீசார், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி, மதுவிலக்கு போலீசார் பொள்ளாச்சி அருகே சி.கோபாலபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்கிடமான சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், வெளி மாநில மது பாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது. வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரித்ததில், பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்த செந்தில்குமார், 40, புரவிபாளையம் ஆனந்தகுமார், 47, பொள்ளாச்சி கரியகாளியம்மன் கோவில் வீதி விக்னேஷ் பிரபு, 33, என்பது தெரிந்தது. இவர்கள், புதுச்சேரியில் மதுபானங்களை வாங்கி வந்து, பொள்ளாச்சியில் கூடுதல் விலைக்கு விற்பதும் தெரிந்தது. மூன்று பேரையும் கைது செய்த போலீசார், 822 மதுபாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.