| ADDED : ஆக 08, 2024 01:21 AM
சென்னை:'வணிக வரி துறை கமிஷனர் ஜெகன்நாதன், வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை செயலர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை செயலராக இருந்த ஜோதி நிர்மலா சாமி, மாநில தேர்தல் கமிஷனராக மாற்றப்பட்டார். இதையடுத்து, வணிக வரித்துறை கமிஷனர் ஜெகன்நாதன், இத்துறையின் செயலர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில், பிரஜேந்திர நவ்நீத், இத்துறையின் செயலராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், நவ்நீத் விடுப்பில் சென்றார்.இதையடுத்து, வணிக வரித்துறை கமிஷனர் ஜெகன்நாதன், வணிக வரி மற்றும் பத்திர பதிவுத் துறை செயலராக கூடுதல் பொறுப்பை கவனிக்க தலைமை செயலர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.