உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளியில் சேர்க்க டி.சி., கேட்கக் கூடாது சுற்றறிக்கை பிறப்பிக்க ஐகோர்ட் உத்தரவு

பள்ளியில் சேர்க்க டி.சி., கேட்கக் கூடாது சுற்றறிக்கை பிறப்பிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை : 'ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு சேரும் போது, மாற்றுச் சான்றிதழ் தரும்படி வற்புறுத்தக் கூடாது; தேவையின்றி மாற்றுச் சான்றிதழில் குறிப்புகள் எழுதக் கூடாது' என, அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா காலக்கட்டத்தில், கட்டணம் செலுத்த முடியாமல் மாணவர்கள் பலர், தனியார் பள்ளிகளை விட்டு விலகி, அரசு பள்ளி உள்ளிட்ட மற்ற பள்ளிகளில் சேர முற்பட்டனர். இதற்காக, மாற்றுச் சான்றிதழ் கேட்டபோது, கட்டண பாக்கி உள்ளிட்ட காரணங்களை கூறி, தனியார் பள்ளிகள் மறுத்தன. இதையடுத்து, மாற்றுச் சான்றிதழ் இல்லாமல், மாணவர்களை சேர்க்கும்படி, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.

மறுக்கக் கூடாது

இதை எதிர்த்து, அகில இந்திய தனியார் பள்ளிகள் சட்டப் பாதுகாப்பு சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 'மாற்றுச் சான்றிதழ் கேட்டு, தற்போது படிக்கும் பள்ளிகளில் விண்ணப்பிக்க வேண்டும். 'பின், ஒரு வாரத்தில் அவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும்; எந்த காரணத்துக்காகவும், மாற்று சான்றிதழ் மறுக்கக் கூடாது' என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, பள்ளிக்கல்வித்துறை மேல்முறையீடு செய்தது. மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், குமரப்பன் அமர்வில், விசாரணைக்கு வந்தது. பள்ளிக்கல்வித் துறை சார்பில், சிறப்பு பிளீடர் யு.எம்.ரவிச்சந்திரன் ஆஜராகி, ''தனி நீதிபதியின் உத்தரவு, கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டத்துக்கு முரணாக உள்ளது. தொடக்கக் கல்வியை இலவசமாக பெறுவதை, அரசு உறுதி செய்யும்படி, சட்டத்தில் கூறப்பட்டுள்ளது,'' என்றார்.மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக, அந்த மாணவனின் மீது களங்கம் கற்பிப்பதை அனுமதிக்க முடியாது. கட்டண பாக்கியை வசூலிக்க, மாற்றுச் சான்றிதழ் ஒரு கருவி அல்ல. மாற்றுச் சான்றிதழ் என்பது, அந்த மாணவனின் தனிப்பட்ட ஆவணம். அதில், தேவையின்றி குறிப்புகளை பள்ளி நிர்வாகம் எழுதக் கூடாது.பள்ளிகளுக்கு கட்டண பாக்கியை செலுத்த வேண்டியது, பெற்றோரின் கடமை. கட்டணம் செலுத்த பெற்றோர் தவறினால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் சட்டப்படி வசூலித்துக் கொள்ள வேண்டும். சான்றிதழில், கட்டணம் செலுத்தாதது பற்றி குறிப்பு எழுதுவது, அந்தக் குழந்தையை அவமானப்படுத்துவது போலாகும்.கட்டணம் செலுத்த பெற்றோர் தவறினால், குழந்தைகள் என்ன செய்யும்? குழந்தைகள் மீது களங்கம் கற்பிப்பதும், மனரீதியாக துன்புறுத்துவது போலாகும். மாற்றுச் சான்றிதழில், கட்டணம் செலுத்தாதது பற்றி குறிப்பு எழுதினால், அந்த மாணவனை மற்ற பள்ளிகளில் சேர்க்க மாட்டார்கள். கல்வி பெறும் உரிமை சட்டத்தில், மாற்றுச் சான்றிதழ் கட்டாயமாக்கப்படவில்லை. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.

சட்டப்படி நடவடிக்கை

தமிழ்நாடு கல்வி விதிகள் மற்றும் மெட்ரிக் குலேஷன் பள்ளி ஒழுங்குமுறை விதிகளை, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். உரிய திருத்தங்களை மூன்று மாதங்களில் மேற்கொள்ள வேண்டும்.மாணவர்கள் சேர்க்கையின் போது, மாற்றுச் சான்றி தழ் அளிக்கும்படி வற்புறுத்தக் கூடாது; மாற்றுச் சான்றிதழில் தேவையின்றி குறிப்புகள் எழுதக் கூடாது என அனைத்து பள்ளி நிர்வாகத்துக்கும், அரசு சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தத்வமசி
ஜூலை 20, 2024 10:10

இவர் பள்ளி நடத்துவது பற்றி எதுவும் தெரியாதவர் போல இருக்கிறார். கோவிட்டுக்கு பிறகு பள்ளிகளில் பணம் வசூலிப்பது மிகவும் கடினமாக உள்ளது என்பதை கண் கூடாக பார்க்கிறார்கள் பெற்றோர்கள். இந்த மாதிரி ஒரு பொறுப்பில்லாத தீர்ப்பு, ஒழுங்காக பணம் செலுத்தும் பெற்றோர்களையும் இனி நீங்கள் பணம் கட்ட வேண்டாம் என்று கூறுவது போல இருக்கிறது. இது பெற்றோர்களை பள்ளிகளுக்கு எதிராக தூண்டி விடும் நோக்கில் உள்ளது. மேலும் வழக்கரிஞ்சர்களுக்கும் நீதிமன்றத்திற்கும் வேறு வேலை இல்லை போல சட்ட ரீதியாக பெற்றுக் கொள்ளவும் என்று பஞ்சாயத்து கூறி உள்ளார். பேத்தலான முடிவு. இது போல நீதிமன்றத்தில் கட்டணம் செலுத்த வேண்டாம் என்றோ, வழக்கறிஞ்சர்கள் பணம் கேட்காமல் வழக்கு நடத்த வேண்டும் என்றோ, இனி கட்டணம் கேட்காமல் விமானம், ரயில், பேருந்து, மகிழுந்து போன்றவைகளில் பயணிக்கலாம் என்றோ, ஓட்டல்களில் பணம் கொடுக்காமல் சாப்பிடலாம் என்றோ தீர்ப்பு வழங்க இயலுமா ? பணம் கேட்காமல் பெட்ரோல் போட்டுக் கொள்ளலாம், காஸ் சிலிண்டருக்கு பணம் கேட்கக் கூடாது என்றெல்லாம் தீர்ப்பு வழங்க இயலுமா யுவர் ஆனர் ?


spr
ஜூலை 20, 2024 09:02

மாற்றுச் சான்றிதழில், கட்டணம் செலுத்தாதது பற்றி குறிப்பு எழுதினால், அந்த மாணவனை மற்ற பள்ளிகளில் சேர்க்க மாட்டார்கள் என்றாலும் இப்படிக்கு குறிப்பிடாவிட்டால் நம்மவர்களில் சிலர் ஏமாற்ற வாய்ப்பிருப்பதால், அதனைக் குறிப்பிடலாம் ஆனாலும் இப்படிக் குறிப்பிட்டாலும் பிற பள்ளிகள் அந்த மாணவர்களை சேர்க்க வேண்டுமென்று சொல்லியிருக்க வேண்டும். பெற்றோர்களிடமிருந்து கட்டணத்தை வசூலிக்க என்ன வழியிருக்கிறது என்றும் சொல்லியிருக்க வேண்டும் இப்படி "வழ வழ கொழ கொழ" என்று தீர்ப்பளிக்கக் கூடாது. மேலும் கட்டணம் செலுத்தாத நிலையில் அவர்களை அச்சுறுத்தும் நோக்கில் ஒழுக்கம், நன்னடத்தை குறித்து எதுவும் குறிப்பிடக் கூடாதென்றும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.


GMM
ஜூலை 20, 2024 07:48

பள்ளி மாறும்போது டி. சி . அவசியம். குறிப்பு எழுதுவது தவறில்லை. கட்டணம் வசூலித்து தான் தனியார் பள்ளிகள் நடக்கின்றன. வழக்கு போட்டு கட்டணம் வசூலிக்க வேண்டிய முறையில் மாணவர்கள் எதிர்காலம் / பள்ளி நற்பெயர் பாதிக்கும். நிர்வாக பணிகளை சட்டம் மூலம் வழக்கறிஞர்கள் பணம் பெற கைப்பற்றி, வாதிட்டு வருகின்றனர். உத்தரவு மறு ஆய்வு செய்து வாபஸ் பெற வேண்டும்.


Kasimani Baskaran
ஜூலை 20, 2024 07:23

பேருந்தில் பயணம் செய்ய பயணச்சீட்டு கேட்கக்கூடாது என்று சொல்வது போல இருக்கிறது இந்த தீர்ப்பு. அதாவது ஒரு துறையில் இருந்து அடுத்த துறைக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரியை மாற்றினால் பழைய துறைக்கு அந்த அதிகாரியை கேள்வி கேட்க அல்லது ஆரம்பித்த வேலையை முடிக்க வைக்கவோ வற்புறுத்தவோ எந்த வித உரிமையும் இல்லை என்பது போல தெரிகிறது.


rama adhavan
ஜூலை 20, 2024 05:21

இந்த தீர்ப்பு சரி இல்லை. உச்ச நீதிமன்றம் சென்றால்இந்த தீர்ப்புக்கு ஸ்டே கிடைக்கும். தீர்ப்பும் அடிபடும். தனி நீதிபதி தீர்ப்பு சரி என்று உச்ச நீதிமன்றம் சொல்லும்.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ