உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.90.52 கோடியில் 150 புதிய பஸ்கள் அமைச்சர் உதயநிதி துவக்கி வைப்பு

ரூ.90.52 கோடியில் 150 புதிய பஸ்கள் அமைச்சர் உதயநிதி துவக்கி வைப்பு

சென்னை:அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில், 90.52 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட 150 புதிய பஸ்களை, அமைச்சர் உதயநிதி சென்னையில் நேற்று துவக்கி வைத்தார். இந்த பஸ்கள் சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்காத, 'பி.எஸ்., 6' வகையைச் சேர்ந்தவை. சென்னை பல்லவன் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு, போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி, மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் மோகன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.புதிய பஸ்களில் மாற்றுத்திறனாளிகள், முதியோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக பயணிக்கும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. பயணியரின் சொகுசு பயணத்துக்காக, முன்புற 'ஏர் சஸ்பென்ஷன்' வசதி செய்யப்பட்டுஉள்ளது. முதியோர், குழந்தைகள் வசதிக்காக, 50 பஸ்களில், கீழ் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. படுக்கைகளுக்கு இடையே போதுமான இடவசதி, தடுப்பு உள்ளது. ஒவ்வொரு இருக்கை மற்றும் படுக்கைக்கும், தனித்தனியே, 'சார்ஜிங் போர்ட்' மற்றும் மின்விசிறி வழங்கப்பட்டுள்ளது.ஓட்டுனர் இருக்கைக்கு அருகில், அபாய ஒலி எழுப்பும் கட்டமைப்பு உள்ளது. பயணியருக்கு தகவல் தெரிவிக்க, ஒலி பெருக்கி உள்ளது. சரக்குகள், பார்சல்களை வைக்க, போதிய இடவசதி உள்ளது. காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில், புதிய பஸ்களின் இன்ஜின்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. அடுத்த மாத இறுதிக்குள், 50 விரைவு பஸ்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை