தேர்தல் பிரசாரத்தை துவக்க அமைச்சர் உதயநிதி உத்தரவு
சென்னை,:''வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு, தி.மு.க.,வினர் இப்போதே பிரசாரத்தை துவக்க வேண்டும்'' என, அமைச்சர் உதயநிதி பேசினார்.தி.மு.க., இளைஞரணி செயலரும், அமைச்சருமான உதயநிதியின் குறிஞ்சி இல்லத்தில், தி.மு.க., பிரமுகர் திராவிட மணியின் இல்லத் திருமணம் நடந்தது. மணமக்களை வாழ்த்தி, உதயநிதி பேசியதாவது:கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் கட்சி தலைவராக, முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றார். அந்த நாளில் இந்த திருமணம் நடப்பது, மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. திராவிட மாடல் அரசு, எண்ணற்ற மக்கள் நலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நீங்கள் அனைவரும் தி.மு.க., ஆட்சியின் திட்டங்கள் அனைத்தையும், மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் உள்ளன. எனவே, இப்போதே தேர்தல் பிரசாரத்தை, தி.மு.க.,வினர் துவக்க வேண்டும். மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., ஆட்சி அமைய உறுதியேற்போம்.இவ்வாறு அவர் பேசினார்.