பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் 67வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த, காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வந்தார். அகில இந்திய காங்., கமிட்டி பொதுச்செயலரும் முன்னாள் எம்.பி.,யுமான விஸ்வநாதன் உடன் வந்தார்.போலீசார் விஸ்வநாதன் காரையும், உடன் வந்த காங்., கட்சியினரின் கார்களையும் தடுத்து நிறுத்தினர். இதனால், கோபமடைந்த காங்., கட்சியினர், வேந்தோணி ரோடு ரயில்வே கேட் அருகே, போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ராமநாதபுரம் மாவட்ட போலீசாரை கண்டித்து பேட்டி அளித்த செல்வப்பெருந்தகை, பின், தொண்டர்களை சமாதானம் செய்து அழைத்துச் சென்றார். தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்., கட்சியினர் இது போல் நடந்து கொண்டதால், சலசலப்பு ஏற்பட்டது. சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாத வகையில், பரமக்குடியில் ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில், 6,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போதும், இப்படியொரு சம்பவம் நடந்தது, தி.மு.க., தலைமையை அதிர்ச்சி அடைய வைத்தது. மாலை 5:15 மணிக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது கட்சி நிர்வாகிகள், நினைவிடம் மீது ஏறினர். இதற்கு தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தால், இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, நாற்காலி வீச்சு நடந்தது. போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தைக் கலைத்தனர். தலைவர்களை நிற்க வைத்து, சிறைபிடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. என்னைப் போன்ற தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால், மக்களின் நிலை என்ன? இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு அனாதை போல வந்து போக முடியாது. செல்வப்பெருந்தகை, தலைவர், தமிழக காங்கிரஸ்