சென்னை : பத்தாம் வகுப்பு உடனடித்தேர்வு முடிவுகள், வரும் 10ம் தேதி வெளியிடப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி., - மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி., ஆகிய பொதுத்தேர்வுகளில், ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்த மாணவர்களுக்கு, கடந்த ஜூன், ஜூலையில் உடனடித் தேர்வுகள் நடந்தன.இத்தேர்வை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகள், வரும் 10ம் தேதி காலை, தேர்வுத்துறை இணையதளம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்படும் என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவித்துள்ளார்.
மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழ்களை, 18 முதல், 20ம் தேதி வரையிலான மூன்று நாட்களில், தேர்வெழுதிய மையங்களில் பெற்றுக் கொள்ளலாம். மறு கூட்டல் விண்ணப்பங்கள், வரும் 11 முதல், 13ம் தேதி வரை, அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் வழங்கப்படுகின்றன. சென்னையில் முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் நான்கு மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறு கூட்டலுக்கான பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஆக.,13 மாலை 5.45 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். ஒருதாள் கொண்ட பாடங்களுக்கு, 205 ரூபாயும், இரு தாள்கள் கொண்ட பாடங்களுக்கு, 305 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். சென்னை மாவட்ட மாணவர்கள், 'டிடி' மூலமாகவும், இதர மாவட்ட மாணவர்கள் கருவூலகங்கள் மூலமாகவும் கட்டணத்தை செலுத்த வேண்டும். மாணவர்கள், விண்ணப்பம் பெறும் அலுவலகங்களிலேயே பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.உடனடித்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையதளங்கள்: www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in, www.pallikalvi.in