வழக்கு விசாரணையை முடிக்காத 8 இன்ஸ்பெக்டர்களுக்கு அபராதம்
சென்னை:பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் வழக்குகளின் விசாரணையை முடிக்க, நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர்கள் 8 பேருக்கு, தலா, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை வடபழனி, திருவான்மியூர், ராஜமங்கலம், சீரணி அரங்கம், வடக்கு கடற்கரை, வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையங்களிலும், சி.பி.சி.ஐ.டி.,யிலும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பதிவான வழக்குகள், கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஜெ.சந்திரன் முன் விசாரணைக்கு வந்தன. இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், வாரன்ட்டை அமல்படுத்தவில்லை. போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், வாரன்ட்டை அமல்படுத்த அவகாசம் கோரினார். இதையடுத்து, நீதிபதி ஜெ.சந்திரன் பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்குகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. நிலுவையில் உள்ள வாரன்ட்டை அமல்படுத்த, நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்குகளை விரைந்து முடிவுக்கு கொண்டு வர, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அனைத்து நடவடிக்கை களையும் எடுக்க வேண்டிய கடமை உள்ளது. பல ஆண்டுகள் நிலுவையில் இருந்த போதும், வழக்குகளை விரைந்து பைசல் செய்ய, இன்ஸ்பெக்டர்கள் தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகளில் விரைந்து தீர்வு காண, கீழமை நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்கும்படி, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இன்ஸ்பெக்டர்களுக்கு பலமுறை உத்தரவிட்டும், நடவடிக்கையும் இல்லை. எனவே, இன்ஸ்பெக்டர்களுக்கு தலா 10,000 ரூபாய் வழக்கு செலவு தொகை விதிக்கப்படுகிறது.இந்த வழக்குகளின் விசாரணை, நவம்பர் 25க்கு தள்ளிவைக்கப்படுகிறது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு, 10,000 ரூபாயை இன்ஸ்பெக்டர்கள் வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.