உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் வரும் பின்னே... பரிசுப் பொருள் வரும் முன்னே... அரசியல் கட்சிகள் தாராளம்...

தேர்தல் வரும் பின்னே... பரிசுப் பொருள் வரும் முன்னே... அரசியல் கட்சிகள் தாராளம்...

புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை மையப்படுத்தி தொகுதிகளில் தீபாவளி பரிசுப் பொருட்களை அரசியல் கட்சியினர் வாரி, வழங்கி வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். புதுச்சேரியில் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள சிலர், தொகுதி மக்களை கவரும் வகையில் பரிசு பொருட்களை வாரி வழங்கி வருகின்றனர். அரசியல் கட்சிகள் முதல் சுயேட்சை வேட்பாளர் வரை இந்த தீபாவளியை மையமாக கொண்டு பரிசுப் பொருட்களை வழங்கி, கடந்த ஒரு மாதமாகவே தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். முத்தியால்பேட்டை தொகுதியில் பா.ஜ., - காங்., - தி.மு.க., - அ.தி.மு.க., - என்.ஆர்.காங்., மற்றும் சுயோட்சைகள் உள்பட ஏழு பேருக்கு மேல் தேர்தலில் போட்டியிட படு தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் இந்த தொகுதி மக்களுக்கு ஏதாவது ஒரு பொருளை மாறி, மாறி வழங்கி வருகின்றனர். இதேபோன்று பல தொகுதிகளில் புதிதாக களம் காண உள்ள அரசியல் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் பங்கிற்கு வீடு, வீடாக தீபாவளி பொருட்களை வழங்கி, வரும் தேர்தலில் நான் போட்டியிட உள்ளேன். உங்களின் ஆதரவும் மற்றும் ஓட்டுகளை எனக்கு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என, கேட்டு வருகின்றனர். பொருட்களை வாங்கும் மக்கள் எந்த வஞ்சனையும் இல்லாமல் எங்க ஓட்டு உங்களுக்கு தான், கவலையே படாதீங்க, நீங்க தான் ஜெயிப்பீங்கன்னு கூறி அவர்களை சகட்டு மேனிக்கு உசுப்பேத்தி அனுப்புகின்றனர். இதனால், பல பேர் தேர்த லில் நாம் இப்போதே வெற்றி பெற்று விட்டோம் என்ற வெற்றி களிப்புடன் உலவுகின்றனர். இது ஒரு புறம் இருக்க, சில பிரதான கட்சியில் போட்டியிட விரும்பும் நபர், கிளை மற்றும் அடிமட்ட நிர்வாகிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு சால்வை அணிவித்து, வீட்டில் உள்ளவர்களின் நலனை விசாரித்து, அண்ணே மறந்துடாதீங்க, வர்ர தேர்தல்ல நீங்க தான் என்னை ஜெயிக்க வைக்கணும். அண்ணனை நம்பி தான் தேர்தலில் நிற்கிறேன், எனக்கூறி தீபாவளி செலவுக்கான தொகையை வழங்கி வருகின்றனர். சில தொகுதிகளில், ஏற்கனவே உள்ள எம்.எல்.ஏ., வை புறக்கணித்து அவருக்கு வர தேர்தல்ல சீட்டு கிடையாது, எனக்கு தான் சீட்டு என, கட்சி தலைமையே சொல்லிடுச்சு. நீங்க இனிமேல் அவரை பார்க்க வேணாம். நான் தான் இந்த தொகுதிக்கு எனக் கூறி, பட்டாசு, இனிப்பு, உள்ளிட்ட தீபாவளி பொருட்களை வீடு வீடாக சென்று விநியோகித்து வருகின்றனர். இதனால் சில இடங்களில் ஒரே கட்சியை சேர்ந்தவர்களிடம் கை கலப்பும் நடக்கிறது. ஒரு தரப்பினர் வழக்கும் பரிசுப் பொருளைவிட எதிர் தரப்பில் இருப்பவர் அவரை விட சற்று கூடுதலான பொருட்களை வழங்குகிறார். அரசியல்வாதிகளின் போட்டா போட்டியால் தொகுதியில் உள்ளவர்களுக்கு தீபாவளி பெரும் கொண்டாட்டமாகவே மாறி உள்ளது. அதே சமயத்தில் அதிகரிக்கும் செலவுகளால் அரசியல்வாதிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ