நீதி கேட்கும் பயணம் தி.மு.க.,வுக்கு முடிவுரை எழுதும்; மதுரையில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சூளுரை
மதுரை : மதுரையில் பா.ஜ., சார்பில் துவங்கிய நீதி கேட்கும் பயணம் தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு முடிவுரை எழுதுவது உறுதி, என, அக்கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜ., சார்பில் 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் நீதி கேட்கும் பிரசார பயண துவக்க விழா மதுரை அண்ணாநகரில் நடந்தது. இதில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: தவறான நீதி சொன்ன ஆட்சிக்கு எதிராக கண்ணகி நீதி கேட்ட மதுரை மண்ணில் இருந்து இப்பயணம் துவங்கியள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு முடிவு கட்ட இன்று முகூர்த்த நாள் குறிக்கப்பட்டுள்ளது. வல்லபாய் படேலுக்கு பிறகு வந்த இரும்பு மனிதராக விளங்குபவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அவரால் தான் 'ஆர்டிக்கல் 370' ரத்து செய்ய முடிந்தது. தி.மு.க.,வை அமித்ஷாவால் தோற்கடிக்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் பேசிவருகிறார். தி.மு.க.,வை மக்களே தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புவர் என அமித்ஷா அன்றைக்கே தெரிவித்துவிட்டார். முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்தவில்லை. வெறும் காட்சிகள் தான் நடக்கின்றன. அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரசாரத்தை துவக்கிய போதே தி.மு.க.,வுக்கு முன்னுரை எழுதிவிட்டார். பா.ஜ.,வின் இந்த நீதி கேட்கும் பயணம் தி.மு.க.,வுக்கு முடிவுரையை எழுதும். இன்னும் 177 நாட்கள் தான் உள்ளன. ஒவ்வொரு நாளும் நாட்கள் குறைந்து கொண்டே வருகின்றன. இந்த பிரசாரத்தின் நோக்கமே 2026 ல் நாம் (கூட்டணி) எல்லோரும் சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும். எல்லோரும் என்றால் நீங்களே புரிந்து கொள்ள வேண்டும். ஆட்சியா நடக்கிறது. எதற்கு எடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்கிறார் ஸ்டாலின். மாநிலம் முன்னேற வேண்டும் என்றால் மத்திய அரசு உறவு வேண்டும். 'உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு தோள் கொடுப்போம்' என மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., சொன்னார். பழனிசாமி முதல்வராக இருந்தபோது மத்திய அரசிடமிருந்து ரூ.40 ஆயிரம் கோடி நிதி பெற்றுத்தந்தார். டபுள் இன்ஜின் அரசு தான் மாநில வளர்ச்சிக்கு தேவை. இது புரியாமல் தமிழ் தமிழ் என்று அரசியல் செய்து, தமிழை விற்று தி.மு.க.,வினர் பிழைப்பு நடத்துகிறார்கள். கச்சத்தீவை தாரைவார்க்க துணை போனவர்கள். ஆனால் அ.தி.மு.க.,, பா.ஜ., தமிழை போற்றும் கட்சிகளாக உள்ளன. தி.மு.க., பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தான் வளர்ச்சியடைந்துள்ளன. மின் கட்டணம், சொத்துவரிகள் தான் உயர்ந்துள்ளன. போதைப் பொருட்கள் பழக்கம், கள்ளச்சாராய சாவுகள் அதிகரித்துள்ளன. இது தான் தி.மு.க., ஆட்சியின் வளர்ச்சி. கள்ளக்குறிச்சிக்கு செல்லாத முதல்வர் ஸ்டாலின் கரூருக்கு சென்றது ஏன். ஏனென்றால் அந்த சம்பவம் செந்தில்பாலாஜி ஏற்பாட்டில் நடந்தது என எல்லோரும் சொல்கிறார்கள். அங்கு நடந்த தொடர்ச்சி ௬ம் பக்கம் உயிர்ப் பலிகளுக்கு தி.மு.க., காரணம். இதையெல்லாம் சிந்திக்க வைக்கவும், தி.மு.க.,வின் மோசமான ஆட்சியை அகற்றுவதற்காக தான் இப்பயணம். எங்களுக்கு மக்கள் மனதில் இடம் உள்ளது என்றார். பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி கணக்கு வெற்றியடையும். புயல், மழை, பனி எதுவானலும் அடுத்த 4 மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். 'இறுமாப்புடன் எங்களை தொடக் கூட முடியாது. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்' என முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். பணம் கொடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெறலாம், பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளதால் அவர்கள் ஓட்டு கிடைத்துவிடும் என்ற இறுமாப்பில் தான் அவர் இப்படி பேசுகிறார். தி.மு.க., ஆட்சியில் அந்தக் கட்சி நிர்வாகிகளின் தங்கை, தாய்க்கு கூட பாதுகாப்பில்லை என அவர்களே நினைக்கும் நிலையில்தான் ஆட்சி உள்ளது. கரூர் சம்பவத்தில் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது. ஆனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி உயிரிழப்புக்கு 1,500 போலீசார் பாதுகாப்பு கொடுக்கின்றனர். ஆட்சிக்கு வந்தவுடன் வேட்டி கட்டிய ஸ்டாலின் தற்போது பேன்ட் அணிகிறார். புட்பால் விளையாடிய முதல்வர் பேரன் இன்பநிதி சினிமாவில் நடிக்கிறார். துணைமுதல்வர் உதயநிதி நாயுடன் போட்டோ எடுத்துக்கொள்கிறார். அந்த நாய்க்கு மீசை கருப்பாக இருந்தது. இப்போது வெள்ளையாக இருக்கு. நோயாளிகளை மருத்துவ பயனாளர்கள் என சொல்ல சொல்கின்றனர். இது தான் இவர்களின் ஆட்சியில் ஏற்பட்ட மாற்றம். ஆனால் மதுவிலக்கு துறை அமைச்சரை சாராயத்துறை அமைச்சர் என்று சொன்னால் கோபம் வரும். தன் பெயரிலேயே திட்டங்கள் அறிவிப்பது, கருணாநிதி பெயரில் பாலம், ரோடு, பாராட்டு விழா நடத்துவது தான் தி.மு.க.,வின் நான்கரை ஆண்டுகால சாதனை. இந்த ஆட்சி துாக்கி எறியப்பட வேண்டும். மீண்டும் பழனிசாமியை முதல்வராக வர வேண்டும். இளைஞர்கள் சினிமாவிற்கு போங்கள். விசில் அடியுங்கள். ஆனால் சினிமாவில் நடிப்பவர்கள் நன்றாக ஆட்சியை தருவார்கள் என நம்பிவிட வேண்டாம். வாக்கு பிளவு ஏற்படுத்தி நம்மை தி.மு.க., ஜெயிக்க முடியும் என இறுமாப்புடன் உள்ளது. அதை உடைத்தெறிய வேண்டும். இந்த யாத்திரைக்கு செல்லுவோர் கட்சி சாராத ஒருவரை உடன் அழைத்து செல்லுங்கள். மதுரை மண்ணில் துவங்கியது வெற்றியை தரும். * நல்ல வாய்ப்பு: காஞ்சிபுரத்தில் இருந்து சென்ற மருந்தால் தான் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் செயல்படவில்லை என ஸ்டாலின் சொல்கிறார். அதன் பின் தமிழக அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர். உண்மை நிலவரம் என்னவென்றால் நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தில் ஆய்வுகள் நடத்தவில்லை என்பது தான். இதற்கு காரணம் ஆய்வுக் கூட்டங்களை நடத்தாத முதல்வர் தான். ஆட்சி நடத்த தெரியாத பொம்மை முதல்வராக உள்ளார். 2026 ஆட்சி மாற்றத்திற்கான அரிய வாய்ப்பு. இதை தவறவிடாமல வெற்றி பெற வேண்டும் என்றார். மத்திய இணை அமைச்சர் முருகன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, த.மா.க., தலைவர் வாசன், இந்திய ஜனநாயக கட்சி மாநில பொது செயலாளர் சண்முகம், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார், ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., பா.ஜ., முன்னாள் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். நயினார் நாகேந்திரன் பிரசார பயண பாடலை முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். குறும்படத்தை மத்திய இணை அமைச்சர் முருகன் வெளியிட்டார்.