மரண தண்டனை கைதியான மகனை மீட்க கோரி தாய் மனு
சென்னை : உயர் நீதிமன்றத்தில் கடலுார் மாவட்டம், பெரியகோட்டுமுளையைச் சேர்ந்த சரோஜா என்பவர் தாக்கல் செய்த மனு:கொலை வழக்கில், என் மகன் பரதன் பாண்டுரங்கன் என்பவருக்கு, சவுதி அரேபியா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அவர், 16 ஆண்டுகளுக்கும் மேலாக, சவுதி சிறையில் உள்ளார். பொது மன்னிப்பு திட்டத்தில், 2015ல் அவரது விடுதலை குறித்து பரிசீலிக்கப்பட்டது. சவுதி அரேபியா நீதிமன்ற தீர்ப்பின்படி, உயிரிழந்தவரின் வாரிசுகள் மன்னித்தால், என் மகனை காப்பாற்றலாம். ஆனால், உயிரிழந்தவரின் குடும்பம் கேரளாவில் உள்ளது.சட்ட உதவி வழங்க, என் மகனுக்கு யாரும் இல்லை. 16 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால் மகனை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய, மாநில அரசுகளுக்கு, கடந்த மார்ச்சில் மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் இல்லை. மனு மீது நடவடிக்கை எடுக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சிவஞானம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணன், புகழேந்தி ஆஜராகினர். 'சவுதி அரேபிய நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அங்கு சிறையில் உள்ளார். இந்த நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.'மேலும், கைதியை இங்கே கொண்டுவர, இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும் என்ற நீதிபதிகள், இதுகுறித்து மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலின் உதவியை பெறலாம்' என்றனர்.இதையடுத்து, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு, 'நோட்டீஸ்' வழங்க, மனுதாரர் தரப்புக்கு அனுமதி அளித்து, விசாரணையை நாளைக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.