ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி:
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகும், தி.மு.க.,வினரின் தேர்தல் விதிமீறல்களுக்கு, அரசு அலுவலர்கள் துணை செல்கின்றனர். தேர்தலில் வெற்றி பெற, அரசு இயந்திரத்தை, தி.மு.க., தவறாக பயன்படுத்தி வருகிறது. எனவே, தேர்தல் வரை, தி.மு.க., அரசை கவர்னர் முடக்கி வைக்க வேண்டும்.
ஒருவேளை கவர்னர் அப்படி பண்ணிட்டா, இதே கோரிக்கையை, பா.ஜ., ஆளும் மாநிலங்கள்ல, எதிர்க்கட்சிகளும் வைக்குமே!
அகில இந்திய காங்., செயலரும், 'மாஜி' எம்.பி.,யுமான விஸ்வநாதன் பேச்சு:
மும்பையில் ராகுலின் பாரத யாத்திரை பயணம் நிறைவு பெற்ற பின், வட மாநிலங்களில் காங்கிரஸ் அலை வீசுகிறது. உ.பி., பீஹார், குஜராத் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என, கருத்து கணிப்புகள் கூறுகின்றன. தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் அனைத்தும் முத்து, பவளம் கோர்த்த மாலையாக ஒளிர்கிறது. தேசிய அளவில் இந்த தேர்தல் அறிக்கை கதாநாயகன், கதாநாயகியாக வலம் வந்து தேர்தல் வெற்றி மாலையை சூட்டி விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
ஏற்கனவே, 2021 சட்டசபை தேர்தலுக்கு தி.மு.க., தந்த தேர்தல் அறிக்கையை இன்னும் யாரும் மறக்காம இருக்காங்களே!
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி:
நாங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, அரசியல் ரீதியாக தான் விமர்சனம் செய்துள்ளோமே தவிர, தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து, இழிவு படுத்தவில்லை. ஜெயலலிதாவை யார் இழிவுபடுத்தினர் என்பது மக்களுக்கு தெரியும்.
சட்டசபையில், 1989ல் நடந்த சம்பவம் ஒன்றே, ஜெயலலிதாவை நீங்க எப்படி நடத்துனீங்க என்பதற்கு சான்றாக இருக்குதே!
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி:
மது, போதை இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும். அதற்கு, தமிழக முதல்வர், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுகின்ற அரசுகள் கொஞ்சம், கொஞ்சமாக மதுவை குறைப்போம் என்றன. ஆனால், அவர்கள் குறைக்கவில்லை. எல்லா, டாஸ்மாக் கடைகளும் மூடப்பட வேண்டும்.
எல்லா டாஸ்மாக் கடைகளையும் மூடிவிட்டால், அரசு கஜானா வறண்டு போயிடும்னு ஆளுங்கட்சியினர் சால்ஜாப்பு சொல்வாங்களே!