| ADDED : டிச 29, 2025 10:46 AM
நமது நிருபர்
சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ஆவணப்படம் இயக்குநர் எஸ். கிருஷ்ணசாமி நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 88.சென்னையில் 1937ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி பிரபல திரைப்பட இயக்குனர் கே. சுப்பிரமணியம் மற்றும் பாடலாசிரியர் மீனாட்சி சுப்பிரமணியம் ஆகியோருக்கு எஸ். கிருஷ்ணசாமி பிறந்தார். இவர் 1960ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு அவர் ஆவணப்படங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, கல்வி பயின்றார். 1963ம் ஆண்டு கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தை அவர் நிறுவினார்.இந்தியாவின் நீண்ட வரலாற்றையும், சிந்து சமவெளியிலிருந்து தொடங்கி இந்திராகாந்தி காலம் வரையிலான அரசியல் மாற்றங்களையும் விவரிக்கும் 'இன்டஸ் வேலி டு இந்திரா காந்தி' என்ற ஆவணப்படத்தை தயாரித்தார். இந்த படம் 1976ல் டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. ஜெய சங்கரா (1991), காஞ்சி மடத்தைப் பற்றிய ஒரு படம்; பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களிடையே சகோதரத்துவம் மற்றும் புரிதலின் அவசியத்தை வலியுறுத்திய மதத்திற்குப் பின்னால் உள்ள யதார்த்தம் தொடர்பான் படம் (1992) உள்ளிட்டவற்றை தயாரித்துள்ளார்.2009ல், அவர் பத்மஸ்ரீ விருதையும், 2020ல், மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் ஆவணப்படங்களுக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக டாக்டர் வி. சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றார். 1987ம் ஆண்டு ஹவாய் நகரில் உள்ள வாடுமுல் அறக்கட்டளையின் ஹானர் சம்மஸ் விருதையும், 2005ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அமெரிக்க சர்வதேச திரைப்பட மற்றும் வீடியோ விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் வென்றார்.இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலையில் மருத்துவமனையில் காலமானார். இவருக்கு மனைவி மோகனா கிருஷ்ணசாமி மற்றும் குழந்தைகள் லதா கிருஷ்ணா, கீதா கிருஷ்ணராஜ் மற்றும் பரத் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.