அறிக்கை எல்லாம் அரசுக்கு பாதகம்; மாற்றப்பட்டார் டி.எஸ்.பி., சுந்தரேசன்
சென்னை : போலீசார் நடத்திய என்கவுன்டர்கள் குறித்து விசாரணை நடத்தி, மனித உரிமை கமிஷனில் அறிக்கை தாக்கல் செய்ததால், டி.எஸ்.பி., சுந்தரேசன் மாற்றப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.காஞ்சிபுரத்தில் நிலம் விற்கும் விவகாரம் தொடர்பாக, ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் கஸ்துாரி, 63, கொல்லப்பட்டார். இது தொடர்பாக, அதே மாவட்டத்தைச் சேர்ந்த, ம.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலர் வளையாபதி,65; அ.தி.மு.க., பிரமுகர் பிரபு, 52, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை போலீசார், காஞ்சிபுரம் நத்தப்பேட்டையில், பயன்பாட்டில் இல்லாத காவலர் குடியிருப்பில் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இருவரும் மருத்துவ சிகிச்சை பெற்று உடல் நலன் தேறினர்.அதேபோல, சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின், ரவுடிகள் திருவேங்கடம், காக்காதோப்பு பாலாஜி, சீசிங் ராஜா ஆகியோர் போலீசாரால், என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக, மாநில மனித உரிமை கமிஷன் விசாரணையில் இறங்கியது. அங்கு பணியாற்றிய டி.எஸ்.பி., சுந்தரேசன் விசாரித்து, மாநில மனித உரிமைகள் கமிஷனுக்கு முதற்கட்ட அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அத்துடன், போலீசாரின் தவறுகளை சுட்டிக்காட்டும் விதமாக, அவர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த 10ம் தேதி, மாநில மனித உரிமை கமிஷன் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த சுந்தரேசன், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் அளித்த அறிக்கை எல்லாம், அரசுக்கு பாதகமாக இருப்பதால், இடம் மாற்றப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. அட்வகேட் ஜெனரல் ஆஜர்
இதற்கிடையே, மாநகர போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்ற போது, ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என்று கூறினார். அதன்பின், ரவுடிகள் மூன்று பேர் என்கவுன்டர் செய்யப்பட்டனர்.இது தொடர்பாக, அக்.,14ல் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, கமிஷனர் அருணுக்கு, மனித உரிமைகள் கமிஷன் 'சம்மன்' அனுப்பி இருந்தது. இதையடுத்து, அருணுக்கு பதிலாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள, மாநில மனித உரிமைகள் கமிஷனில் நேற்று காலை, 11:45 மணியளவில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.