சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக, அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில், தி.மு.க., - எம்.பி., ஆ.ராஜா, சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி தொகுதி எம்.பி.,யுமான ஆ.ராஜா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், 2015ல் சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 2022ல், இந்த வழக்கில் ராஜா,கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், விஜய்சடரங்கனி மற்றும் இரு நிறுவனங்கள் மீது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.அதில், குற்றம்சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தை விட, 579 சதவீதம் அதிகமாக, 5.53 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் குவித்ததாக சி.பி.ஐ.,கூறியிருந்தது. அதன் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், ராஜா உள்ளிட்டோர் மீது, அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது.இந்த வழக்கு, சி.பி.ஐ., நீதிமன்ற நீதிபதி எஸ்.எழில் வேலவன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தில் ராஜா நேரில் ஆஜரானார். வழக்கு ஆவணங்களை அவருக்கு வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வரும் செப்., 18க்கு விசாரணையை தள்ளிவைத்தார்.இதேபோல, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கிலும், ராஜா உள்ளிட்ட அனைவரும், நீதிபதி சி.சஞ்சய் பாபா முன் நேற்று விசாரணைக்கு ஆஜராகினர்.