உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்டர்ன்ஷிப் மாணவர்களை குறிவைக்கும் மோசடி கும்பல்: பணம் பறிப்பதில் புது வழி

இன்டர்ன்ஷிப் மாணவர்களை குறிவைக்கும் மோசடி கும்பல்: பணம் பறிப்பதில் புது வழி

சென்னை: 'இன்டர்ன்ஷிப்' பயிற்சிக்காக நிறுவனங்களை தேடும் மாணவர்களை குறிவைத்து, புது மோசடி நடந்து வருகிறது. கல்லுாரி இறுதியாண்டு படிக்கும் மாணவ - மாணவியர், தங்களின் பாடங்களுக்கேற்ப, 'இன்டர்ன்ஷிப்' எனும் களப்பயிற்சிக்கு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை அனுகுவர். அதாவது மாணவர்கள் ஒரு மாதம் நிறுவனங்களுக்கு சென்று, களப்பயிற்சி எடுக்க வேண்டும். இது கல்லுாரிகளில் உள்ள பாடத்திட்டத்தின் ஒரு பகுதி. இந்நிலையில், ஆன்லைனில் நிறுவனங்களை தேர்வு செய்து விண்ணப்பிக்கும்போது, பல போலி நிறுவனங்கள் இயங்குகின்றன. அவை தகவல்களை பெற்றுக்கொண்டு, முன்னணி நிறுவனம் போல காண்பித்து, மாணவர்களை ஏமாற்றுகின்றன. எனவே, மாணவர்கள் பயிற்சிக்கு செல்வதற்கு முன், அந்நிறுவனத்தை பற்றி ஆராய்ந்து சேர்வது நல்லது என, சைபர் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இது குறித்து, சைபர் பாதுகாப்பு துறை மாணவர்கள் கூறியதாவது:

சென்னையில் உள்ள கல்லுாரி ஒன்றில், சைபர் பாதுகாப்புத் துறை இறுதியாண்டு படித்து வருகிறோம். 'இன்டர்ன்ஷிப்' பயிற்சிக்காக ஒவ்வொருவரும் தனித்தனி நிறுவனங்களில் விண்ணப்பித்து வந்தோம். அப்போது எங்களுக்கான கல்லுாரியின் இ - மெயில் முகவரிக்கு, 'சாம்கர் சாப்ட்வேர் சொலு சன்ஸ்' என்ற நிறுவனத்தில் இருந்து மெயில் வந்தது. அதில், 'எங்கள் நிறுவனத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள்; மற்ற விபரங்களை பூர்த்தி செய்யுங்கள். உங்களுக்கு உதவித்தொகையாக, 15,000 ரூபாய் வழங்கப்படும்' என கூறப்பட்டு இருந்தது. பின் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேர்காணல் நடத்தினர். அடுத்த சில நாளில், 'போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் பெற்று பதிவேற்ற வேண்டும்; அதற்கு, 2,000 ரூபாய் பணத்தை, யு.பி.ஐ., வாயிலாக செலுத்த வேண்டும்' என கூறப்பட்டது. அதையடுத்து, இ - மெயிலை முழுதும் ஆராய்ந்ததில், அது போலி என்பது தெரியவந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

உஷாராக இருங்கள்

புதிதாக வேலை தேடுவோர் மற்றும் கல்லுாரி மாணவர்கள், தங்கள் திறனை வெளிப்படுத்தவும், வேலை வாய்ப்புகளை கண்டறியவும், 'லிங்ட்இன்' இணையதளம் செயல்படுகிறது. இதில், 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்கள் துவங்கி, பெரிய முன்னணி நிறுவனங்கள் வரை உள்ளன. அதே சமயம், மோசடி கும்பல், போலி நிறுவனங்களை உருவாக்கி, 'ரெஸ்யூம்' கேட்டு பெறுகிறது. இதனால் தனிப்பட்ட தகவல்களும் கசிகின்றன. பலர் பணம் செலுத்தி ஏமாறுகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், இணையதளத்தில் பணம் கேட்பதில்லை. எனவே ஏமாற வேண்டாம் என்கின்றனர் சைபர் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சிட்டுக்குருவி
அக் 28, 2025 05:23

இந்தியாவில் அமெரிக்கா போன்று better business beuro தொடங்கி அதில் பதிவு செயபார்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பதிவிட்டு அந்த கொம்பனிகளில்மட்டுமே வேலை தேடுபவர்கள் application போடும் வசதியை ஏற்படுத்தவேண்டும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை