வீட்டுவசதி வாரியத்தின் புதிய திட்டங்களில் வீடுகள் குறித்த
முழுமையான தகவல்களை பொதுமக்கள் எளிதாக பெறுவதற்காக, கியூ.ஆர்.,
குறியீடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில்,
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீட்டுவசதி வாரியம்
சார்பில், குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இத்திட்டங்களில், வீடு, மனை வாங்க, மக்கள் மத்தியில் ஆர்வம்
அதிகமாக காணப்படுகிறது. ஆனால்,
இத்திட்டங்களில் வீடுகள் விற்பனை குறித்த அறிவிப்புகள்,
அவ்வப்போது வெளியாகின்றன. இதில், வீடுகள் குறித்த அடிப்படை
விபரங்கள் மட்டுமே வெளியாகின்றன.இதன்படி, பொது மக்கள்
வாரியத்தின் சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகங்களை அணுகி கூடுதல்
விபரங்கள் பெற முயற்சிக்கின்றனர். ஆனால், கோட்ட
அலுவலகங்களில் உள்ள அதிகாரிகள், பொது மக்களுக்கு வீடுகள் குறித்த
விபரங்களை முறையாக அளிப்பதில்லை. இந்நிலையில் விற்பனைக்காக
அறிவிக்கப்படும் வீடுகளின் விபரங்களை பொதுமக்கள் எளிதாக அறிய,
புதிய வசதியை வீட்டுவசதி வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து வீட்டுவசதி வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:தனியார்
கட்டுமான நிறுவனங்களின் குடியிருப்பு திட்டங்கள் குறித்த
அறிவிப்புகள், பல்வேறு வகைகளில் மக்களிடம் எளிதாக செல்கின்றன.
ஆனால், வீட்டுவசதி வாரிய திட்ட விபரங்கள் எளிதாக மக்களிடம்
செல்வதில், சில பிரச்னைகள் காணப்படுகின்றன. இதற்கு தீர்வாக,
தனியார் நிறுவனங்கள் போன்று வீட்டுவசதி வாரிய திட்டங்களின்
வெளியீடுகளில், கியூ.ஆர்., குறியீட்டை சேர்க்க முடிவு செய்து
இருக்கிறோம். இந்தக்
குறியீட்டை மொபைல் போனில் ஸ்கேன் செய்தால், அந்த குடியிருப்பு திட்டம்
தொடர்பான முழுமையான தகவல்கள் உடனே கிடைத்துவிடும்.இதில், அந்த
குறிப்பிட்ட திட்டத்தில் மொத்த வீடுகள் எண்ணிக்கை மட்டுமல்லாது,
ஒவ்வொரு வீட்டின் பரப்பளவு, திட்ட அனுமதி பெற்றது, ரியல் எஸ்டேட்
சட்டப்படி பதிவு செய்யப்பட்டது உள்ளிட்ட தகவல்களை மக்கள் எளிதாக
பெறலாம். இத்துடன் குடியிருப்பு
திட்டங்கள் தொடர்பான சந்தேகங்களை விரைவாக பொதுமக்கள் அறிந்து,
ஆன்லைன் முறையிலேயே முன்பதிவு செய்யும் வசதியும் அறிமுகமாகி
உள்ளது.இதனால் அலுவலர்களை நம்பி இல்லாமல் பொதுமக்கள் எளிதாக வீடு வாங்கலாம்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -