ஆசிரியர் நியமன விவகாரம் அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
சென்னை:சிறுபான்மை கல்வி நிறுவனத்தில், உருது பாட ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கும்படி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை, ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருப்பத்துார் மாவட்டத்தில், 'மதரஸா- இ- அசாம்' என்ற, அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு காலியாக இருந்த, உருது பாட ஆசிரியர் பணியிடத்துக்கு, ஹாஜிரா என்பவர், 2022ல் நியமிக்கப்பட்டார். ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதவில்லை எனக்கூறி, ஹாஜிராவின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்து, 2023ல், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, பள்ளி நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆசிரியர் தகுதித்தேர்வு, சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது எனக்கூறி, ஹாஜிராவின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கும்படி, கடந்த ஆண்டு மார்ச்சில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தொடக்க கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் சார்பில், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.சுரேந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:ஆசிரியர் தகுதித்தேர்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என, உயர் நீதிமன்றம் ஏற்கனவே இரண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே, இந்த மேல் முறையீட்டு மனுவை, ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்கிறோம். அபராத தொகையை தமிழக அரசு, நான்கு வாரத்துக்குள் பள்ளிக்கு வழங்க வேண்டும். இத்தொகையை, ஹாஜிராவின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்து உத்தரவிட்ட அதிகாரியிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.