உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநில அரசுகள் பங்கில் தான் ஜி.எஸ்.டி., வரி குறைப்பு: ஸ்டாலின்

மாநில அரசுகள் பங்கில் தான் ஜி.எஸ்.டி., வரி குறைப்பு: ஸ்டாலின்

சென்னை: 'தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள ஜி.எஸ்.டி., வரி குறைப்பில் சரிபாதி அளவு, மாநில அரசுகளின் பங்கில் இருந்துதான் செய்யப்படுகிறது' என, முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:

ஜி.எஸ்.டி., வரி குறைப்பாலும், வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பை உயர்த்தியதாலும், இந்தியர்கள், 2.5 லட்சம் கோடி ரூபாயை சேமிக்கலாம் என, பிரதமர் மோடி கூறியுள்ளார். இதை தானே தொடக்கத்தில் இருந்தே, எதிர்க்கட்சிகளான நாங்கள் வலியுறுத்தி வந்தோம். எட்டு ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்திய குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை, எப்போதே சேமித்து இருக்க முடியும். தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள வரி குறைப்பில் சரிபாதி அளவு, மாநில அரசுகளின் பங்கில் இருந்துதான் செய்யப்படுகிறது. இந்த உண்மையை மறைப்பதாலும், பாராட்ட மறுப்பதாலும், இதை சுட்டிக்காட்ட வேண்டியது என் கடமை. மத்திய பா.ஜ., அரசு, மாநிலங்களுக்கு நியாயமாக சேர வேண்டிய நிதியை தர மறுக்கிறது. ஹிந்தி திணிப்பை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்த அநீதி, எப்போது முடிவுக்கு வரும்? தங்களது உரிமைகளை பாதுகாத்து, தம் மக்களுக்காக முன் நிற்கும் மாநில அரசுகளை தண்டிப்பதன் வாயிலாக, இந்தியா வளர்ச்சி பெற முடியாது. கூட்டாட்சி கருத்தியலுக்கு மதிப்பளிக்க வேண்டும்; உரிய நிதியை விடுவிக்க வேண்டும். மக்களுக்கு நியாயமாக சேர வேண்டியதை தந்து பயனடைய விட வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !