உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லையப்பர் கோவில் மண்டபம் கடைகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு

நெல்லையப்பர் கோவில் மண்டபம் கடைகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு

மதுரை, :நெல்லையப்பர் கோவில் இடத்திலுள்ள கடைகளை அகற்ற, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. துாத்துக்குடி மாவட்டம், சிவந்தகுளம் பாலசுப்ரமணியம் தாக்கல் செய்த பொதுநல மனு: திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் பழமையானது. இதன் மண்டபத்தில் அமைந்துள்ள கடைகளால், பழமையான கட்டமைப்புகள் சேதமடைகின்றன. கோவிலை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும். கடைகளை அகற்ற, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நேற்று முன்தினம், இதை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, 'திருநெல்வேலி அறநிலையத்துறை இணை கமிஷனர் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டது. அதன் பின், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு நேற்று விசாரித்தது. அறநிலையத்துறை இணை கமிஷனர் கவிதா பிரியதர்ஷினி ஆஜரானார். அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன், 'கடைகளை காலி செய்ய ஏற்கனவே சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது' என்றார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நெல்லையப்பர் கோவில் ஏழாம் நுாற்றாண்டை சேர்ந்தது. கடைகளில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் கோவில் கட்டமைப்பிற்கு பாதிப்பு ஏற்படும். அறநிலையத்துறை விதிகளுக்கு புறம்பாக, கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு தெரிவித்தது. ஏற்கனவே, கடைகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக, அறநிலையத்துறை தரப்பு தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்டோருக்கு விளக்கமளிக்க போதிய வாய்ப்பளித்து காலி செய்ய, சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தர விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி