உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எங்களை விமர்சித்தால் நாங்களும் விமர்சிப்போம் காங்.,- எம்.எல்.ஏ.,க்கு ஆளும்கட்சியினர் பதிலடி

எங்களை விமர்சித்தால் நாங்களும் விமர்சிப்போம் காங்.,- எம்.எல்.ஏ.,க்கு ஆளும்கட்சியினர் பதிலடி

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக காங். கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் உள்ளார். அவர், 'தொகுதி பக்கமே வருவதில்லை' என காங்., கட்சியை சேர்ந்த முன்னாள் நிர்வாகி லூர்துமணி என்பவர், சமீபத்தில் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், சாத்தான்குளத்தில் சமீபத்தில் நடந்த தெற்கு மாவட்ட காங். நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., ''தொகுதி பிரச்னைகள் குறித்து சட்டசபையில் பேசினாலும், அமைச்சர்களிடம் மனு அளித்தாலும், செய்து கொடுக்கிறோம் என்று மட்டும் சொல்வார்கள். ஆனால், எதுவும் நடப்பதில்லை. நான் மட்டுமல்ல; கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சி எம்.எல்.ஏ.,க்களும் இப்படித்தான் புலம்புகின்றனர்,'' என அரசுத் தரப்பை குற்றம்சாட்டிப் பேசியிருந்தார். கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,வாக இருப்பவரே, இப்படி ஆளும்கட்சியினர் மீது அதிரடியாக புகார் கூறி பேசுவது, தி.மு.க., தரப்பில் கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், நேற்று, தி.மு.க., தரப்பிலிருந்து போஸ்டர் ஒட்டப்பட்டன. ஸ்ரீவைகுண்டம் சட்டசபை தொகுதி தி.மு.க., தொண்டர்கள் என்று குறிப்பிட்டு, ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.,வுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.''தொகுதி பக்கமே வராமல், தொகுதி மக்களை சந்திக்காமல், தொகுதி மக்களின் அடிப்படைத் தேவை குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் போனை எடுத்து பேசாத எம்.எல்.ஏ., தி.மு.க., அரசை குறை கூறி பேசலாமா? என கேள்வி எழுப்பி இருந்தனர். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ., அமிர்தராஜ் கூறியதாவது: அந்த போஸ்டர் என்னைக் குறிப்பிட்டுத்தான் ஒட்டப்பட்டிருக்கிறது. யார் ஒட்டியது என தெரியாது. ஆனால், இதை ஆரோக்கியமான விவாதமாகத்தான் பார்க்கிறேன். தொகுதிக்கென நிறைய கோரிக்கைகள் அரசுத் தரப்பிடம் வைக்கப்பட்டன. முதல்வரும் செய்து தருவதாகவே கூறினார். ஆனால், எங்கோ அது தடைபடுகிறது. அதைத்தான், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் குறிப்பிட்டுப் பேசினேன். கட்சியினரும், தி.மு.க.,வினரும் அதை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. அரசியல் ரீதியில் என் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் யாரோ ஒருவர் செய்த வேலை தான், அந்த போஸ்டர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை