காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு அதிகரிப்பு முதியோர் தடுப்பூசி போடுவது நல்லது
சென்னை:தமிழகத்தில் குளிர்கால இருமல், சளி, காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், நோயாளிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளில், நோய் எதிர்ப்பு குறைந்தவர்கள் தான், அதிக அளவில் பாதிக்கப்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, பொதுநல டாக்டர் நந்தகுமார் கூறியதாவது:நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இல்லாதவர்கள், சளி, இருமலால் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள், கீரை வகைகள், பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி செய்வதன் வாயிலாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல் போன்றவை வழியாகவும், பாதிப்புகளை தவிர்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:அரசு மருத்துவமனைகளில், குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தில், 11 வகையான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. தற்போதைய தட்பவெப்பநிலை மாற்றத்தால், இணை நோயாளிகள், காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர், ஆஸ்துமா நோயாளிகள், மூச்சு தொந்தரவு இருப்போர், நிமோனியா, இன்புளூயன்ஸா தொற்றுக்கான தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இவை கட்டாயம் கிடையாது; அதேநேரம், போட்டு கொள்வது நல்லது.இவ்வாறு அவர் கூறினார்.