சென்னை : 'ஆபரேஷன் சக்சஸ் பேஷன்ட் டைடு' என்ற சொல் எதற்கு பொருத்தமாக இருக்கிறதோ, இல்லையோ காச நோய் ஒழிப்பு திட்டத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. ஆனால், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 40 சதவீதம் பேருக்கு காச நோய் கிருமி தொற்று உள்ளது. ஆண்டுதோறும் புதிதாக 20 லட்சம் பேருக்கு காச நோய் கிருமி தொற்று ஏற்படுகிறது, 3 லட்சத்து 30 ஆயிரம்பேர் உயிரிழக்கின்றனர் என, உலக சுகாதார மைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஊட்டச் சத்துக் குறைவு, பொது சுகாதார குறைவு ஆகியவை காச நோய் அதிகரிக்க காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஊட்டச் சத்து குறைவால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, காச நோய் கிருமி எளிதில் தாக்க துவங்குகிறது. உடலில் கிருமி இருந்தாலும் எதிர்ப்பு சக்தி நன்றாக இருக்கும் வரை கிருமியால் ஒன்றும் செய்ய முடியாது. எதிர்ப்பு சக்தி குறைந்து, கிருமி பெருகியவுடன் நோய் தீவிரமடையும். அந்த நோயாளி இருமும் போது, சளி மூலம் மற்றவர்களுக்கு பரவும். ஒரு காச நோயாளி மூலம் 15 பேருக்கு நோய் பரவுகிறது.
காச நோயை கட்டுப்படுத்த மத்திய அரசு 1991ம் ஆண்டு, 'டாட்ஸ்' (ஈ.O.கூ.கு.,)சிகிச்சையை அறிமுகப்படுத்தியது. நோயாளியைத் தேடி சென்று நேரடியாக சிகிச்சை அளிப்பதே இத்திட்டம். இதில், தமிழகம் முழுவதும் 144 காச நோய் சிகிச்சை மையங்களும், 791 பரிசோதனை மையங்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாத்திரை, மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. நோயாளிகள்,ஆறு மாதங்கள் தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை உறுதிப்படுத்த, தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து சிகிச்சை பெறாவிட்டால், மாத்திரைகளை எதிர்த்து செயல்படும் சக்தியை கிருமிகள் பெற்றுவிடுகின்றன. இவர்களுக்காக 'டாட் பிளஸ்' என்ற புதிய சிகிச்சை திட்டம் துவங்கப்பட்டு விலை உயர்ந்த மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. 'டாட்ஸ்' திட்டத்தை இருபது ஆண்டுகளாக அமல்படுத்தியும், காச நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியவில்லை என்பதை சுகாதாரத் துறை அதிகாரிகள் ஒப்புக் கொள்கின்றனர்.
ஆனால், மாநில காசநோய் அதிகாரி டாக்டர் அருணகிரி இதை மறுக்கிறார். அவர் கூறும்போது, ''இத்திட்டத்தில் சிகிச்சை பெறுபவர்கள், 85 சதவீதம் பேர் குணமடைகின்றனர். அரசின் முயற்சியால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பரிசோதிக்கப்படுகின்றனர். இதனால், புள்ளி விவரங்களை ஒப்பிடும்போது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது போல் தெரிகிறது,'' என்றார்.
'ஆறு மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை பெறாமல், இடையே மாத்திரைகளை விட்டு விடுவது ஒரு காரணம். மேலும், கிருமி தொற்றியவுடன் நோய் வர வேண்டும் என்ற அவசியமில்லை. ஏதாவது ஒரு காரணத்தால் எதிர்ப்பு சக்தி குறையும்போது, நோய் தாக்கும். இது தான் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம்' என, வேறொரு அதிகாரி தெரிவித்தார். தமிழகத்தில் கடந்தாண்டு 80 ஆயிரம் பேருக்கு நோய் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை துவங்கப்பட்டுள்ளது. மற்ற சுகாதார திட்டங்களை ஒப்பிடும்போது, காச நோய்க்கான 'டாட்ஸ்' சிகிச்சை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை. எனவே, அதற்கான காரணத்தை ஆராய்ந்து, நோயைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பெரும்பாலான டாக்டர்களின் கருத்து.
உரிய சிகிச்சை இல்லாவிடில் உயிருக்கு ஆபத்து
*'மைகோபாக்டிரீயம் டூபர்குளோசிஸ்' என்ற கிருமி காச நோயை ஏற்படுத்துகிறது*இருமும் போதும், தும்மும் போதும், காற்று மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு கிருமி பரவுகிறது.* கிருமி, உடலில் புகுந்து முதலில் நுரையீரலை தாக்கும். சிறுநீரகம், மூளை, தண்டுவடம் போன்ற உறுப்புகளையும் இக் கிருமி தாக்க வாய்ப்புள்ளது.* ஒரு நோயாளி, புதிதாக 15 பேருக்கு நோயை ஏற்படுத்துகிறார்*இரண்டு வாரத்துக்கு தொடர் இருமல், நெஞ்சுவலி, சளியில் ரத்தம், காய்ச்சல் போன்றவை நோய்க்கான அறிகுறிகள்.*கிருமி தொற்றிய எல்லோருக்கும் நோய் வர வாய்ப்பில்லை. உடலில் எதிர்ப்பு சக்தி குறையும் போது நோய் தலைகாட்டும்.*சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் நோய் இருந்தால், காச நோய் கிருமி எளிதில் தொற்றிக் கொள்ளும். எய்ட்ஸ் இருந்தால், காச நோய் கிருமிக்கு கொண்டாட்டம் தான்.* உரிய சிகிச்சை பெறாவிட்டால் உயிருக்கு ஆபத்தாகும்* காசநோய்க்கு, 'டாட்ஸ்' திட்டத்தில் ஆறு மாதம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருந்து, மாத்திரைகள் இலவசம். தனியாகவும் மருந்து, மாத்திரைகள் கிடைக்கின்றன.