உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு ஊழியர்களை துன்புறுத்தும் வகையில் தனிப்பட்ட தகவல்களை வழங்க முடியாது தகவல் ஆணையம் கைவிரிப்பு

அரசு ஊழியர்களை துன்புறுத்தும் வகையில் தனிப்பட்ட தகவல்களை வழங்க முடியாது தகவல் ஆணையம் கைவிரிப்பு

சென்னை:'அரசு ஊழியர்களை துன்புறுத்தும் நோக்கத்தில் அவர்களது தனிப்பட்ட விபரங்களை கோரினால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்க முடியாது' என, தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாசன்; இவர், கிருஷ்ணகிரியில் நீர்வளத்துறையில் உதவிப் பொறியாளராக பணியாற்றிய காளிப்பிரியன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்து, கடன், வருமான வரி விபரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். அந்த மனு மீதான விசாரணை, மாநில தகவல் ஆணையர் பிரியகுமார் முன் நடந்தது.அப்போது ஆஜரான உதவிப் பொறியாளர் காளிப்பிரியன், அரசு புறம்போக்கு நிலத்தில் சீனிவாசன் செய்திருந்த ஆக்கிரமிப்பை அகற்றியதால், பழிவாங்கும் நடவடிக்கையாக, இத்தகவல்களை கேட்டிருப்பதாக தெரிவித்தார். காளிப்பிரியன், ஊழலில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையிலேயே தகவல்களை கேட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.பின், மாநில தகவல் ஆணையர் பிரியகுமார் பிறப்பித்த உத்தரவு:அரசு ஊழியருக்கு எதிராக மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தினர் தொடர்பான தனிப்பட்ட தகவல்களையும் மனுதாரர் கேட்டுள்ளார். பொதுநலம் இருக்கும் பட்சத்தில், அரசு ஊழியர்களின் சொத்து விபரம், கடன் விபரம் உள்ளிட்டவற்றை வழங்கலாம். இந்த விவகாரத்தில் பொதுநலம் இல்லை. உதவிப்பொறியாளர் காளிப்பிரியன் ஊழல் செய்திருப்பதாக, மனுதாரர் கருதினால், உரிய துறைகளிடம் புகார் அளிக்கலாம். இந்த விவகாரத்தில் பொதுநலன் இல்லை. அந்தரங்க உரிமைகள் பாதிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளதால், மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை