UPDATED : ஜூலை 27, 2011 07:03 PM | ADDED : ஜூலை 27, 2011 06:39 PM
சென்னை:''சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும், சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்தாததை கண்டித்து, 29ம் தேதி(நாளை) மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிக்க வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். அவரது அறிக்கை:தி.மு.க., ஆட்சியில், சமச்சீர் கல்வி திட்டம் அவசரமாக கொண்டு வந்ததை போலவும், அதனால், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் தரத்தை உயர்த்த, உயர் மட்டக் குழு அமைத்து ஆராய இருப்பதால், இந்த ஆண்டு சமச்சீர் கல்வி கொண்டு வர சாத்தியமில்லை என, அரசு வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டுள்ளார்.அனைவருக்கும் சம உரிமை வேண்டும் என்று பேசப்படும் இக்காலத்தில், கல்வியிலும் சமத்துவம் நிலைநாட்ட வேண்டும் என்பதே தி.மு.க., நிலை. அதை நடைமுறைப்படுத்தவே, வல்லுனர்கள் குழு மூலம் ஆய்வு செய்து சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. தி.மு.க., சார்பில், 29ம் தேதி தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளை மாணவர்கள் புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். மாணவர்கள் நினைத்தால் எதிலும் வெற்றி என்பதை நிரூபிக்கும் வகையில் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.