கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு பழனிசாமியை ஏன் விசாரிக்கக்கூடாது? * ஐகோர்ட் கேள்வி
சென்னை:'கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில், எதிர்தரப்பு சாட்சியாக, முன்னாள் முதல்வர் பழனிசாமியை ஏன் விசாரிக்கக்கூடாது' என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், மனுவின் உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதுார் கொலை செய்யப்பட்டார். எஸ்டேட்டுக்குள் புகுந்து கொள்ளையும் அடிக்கப்பட்டது. 2017 ஏப்ரலில் இந்த சம்பவம் நடந்தது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டிரைவர் கனகராஜ், சாலை விபத்தில் மரணம் அடைந்தார். முதலாவதாக குற்றம் சாட்டப்பட்ட சயானின் மனைவியும், குழந்தையும் விபத்தில் இறந்தனர். இந்த விபத்தில் படுகாயத்துடன் சயான் தப்பினார்.நீலகிரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. வழக்கு தொடர்பாக, முன்னாள் முதல்வர் பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், முன்னாள் கலெக்டர் சங்கர், முன்னாள் எஸ்.பி., முரளி ரம்பா, அ.தி.மு.க., நிர்வாகி சஜீவன், எஸ்டேட் மேலாளர் நடராஜன் மற்றும் சுனில் ஆகியோரை விசாரிக்கக்கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ்சாமி ஆகியோர், நீலகிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதி அளித்தது. மற்றவர்களை விசாரிக்க கோரியதை நிராகரித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தீபு உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.இம்மனு, நீதிபதி வேல்முருகன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்தி, முதல்வருக்கு சம்மன் அனுப்பும்படி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கோர முடியாது என, நீலகிரி நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது' என்றார். போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், 'கோடநாடு கொலை, கொள்ளைச் சம்பவம் வழக்கில், மேல் விசாரணை நடந்து வருகிறது' என்றார்.இதையடுத்து, 'இந்த வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக, பழனிசாமியை ஏன் விசாரிக்கக்கூடாது' என, கேள்வி எழுப்பிய நீதிபதி வேல்முருகன், மனுவின் உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.