பஸ் டயரில் சிக்கி ஏற்படும் உயிரிழப்புகள் தவிர்க்க புதிய தடுப்பு கட்டமைப்பு அறிமுகம்
விழுப்புரம்:தமிழகத்தில் பஸ் டயர்களில் விழுந்து ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக, அரசு டவுன் பஸ்களில் தற்போது பாதுகாப்பு தடுப்பான, 'அண்டர் ரன் புரொடெக்டர் ஷீட்' அமைக்கப்பட்டு வருகிறது.தமிழக சாலைகள், நான்கு வழிச்சாலை, ஆறு வழிச்சாலைகள் என மேம்படுத்தப்படும் நிலையிலும், விபத்துகளின் எண்ணிக்கை குறையாமலும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையும், போக்குவரத்து விதிமீறல்களும் விபத்துகளுக்கு காரணமாகின்றன. இரு சக்கர வாகன ஓட்டிகள், பஸ், லாரி போன்ற கனரக வாகனங்களை கடந்தபடியும், அதன் ஓரமாகவும் பயணிக்கும்போது, பக்கவாட்டில் விழுந்து, டயர்களில் சிக்கி; பஸ்களில் படிக்கட்டுகளில் தொங்கிச் செல்லும் பயணியர், கீழே விழுந்து டயர்களில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.மோசமான உயிரிழப்புகளை தடுப்பதற்கு, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில் விபத்து அதிகம் நடப்பதால், அரசு டவுன் பஸ்களில், டயர்களுக்கு அடியில் சிக்கி ஏற்படும் விபத்துகளை தடுக்க, பாதுகாப்பு சட்டங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், விழுப்புரம் கோட்டத்தில் இயங்கி வரும் டவுன் பஸ்களில், முதல்கட்டமாக இந்த விபத்து தடுப்புச் சட்டம் பொருத்தப்பட்டுள்ளது. அரசு பஸ்களின் பக்கவாட்டுப் பகுதிகளில், இந்த பாதுகாப்பு சட்டம் பொருத்தப்பட்டுள்ளது.இடதுபுறம் பஸ் படிக்கட்டுகளுக்கு இடையே உள்ள, 8 அடி இடைவெளியிலும், வலதுபுறம் கீழ் பகுதியில் 12 நீளத்திற்கும், ஒன்றரை அடி அகலத்தில், இரும்பு ஆங்கில்கள் அமைக்கப்பட்டுள்ளன; அவற்றின் மீது, இளஞ்சிவப்பு நிற பிளாஸ்டிக் ஷீட் தொங்கவிட்டுள்ளது.விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: கீழே விழுவோர், பஸ் டயர்களில் சிக்குவதை தடுக்க, இந்த சட்டம் பொருத்தப்படுகிறது. குறிப்பாக டவுன் பஸ்களில் மாணவர்கள், இளைஞர்கள் படியில் நின்று விழும்போது, உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.தவறி விழும்பட்சத்தில், அந்த இரும்பு தடுப்பில் பட்டு, அவர் வெளியே தள்ளி விடப்படுவார். பக்கவாட்டில் இரு சக்கர வாகன ஓட்டிகள் வந்து உரசினாலும், அவர்களும் உள்ளே விழாமல் பாதுகாக்கப்படுவர். இந்த பக்கவாட்டு சட்டம் தெரியாமல் இருக்கவும், அதில் கால் வைப்பதை தடுக்கவும், இளஞ்சிவப்பு நிற பிளாஸ்டிக் ஷீட் போட்டு கவர் செய்துள்ளோம்.விழுப்புரத்தில் முதற்கட்டமாக மொத்தமுள்ள, 246 டவுன் பஸ்களில் இந்தச் சட்டம் பொருத்தப்பட்டுள்ளது. விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலுார், திருவள்ளூர், கடலுார் ஆகிய ஆறு மண்டலங்களில் உள்ள, 1,036 டவுன் பஸ்களிலும், இந்த கட்டமைப்பு பொருத்தப்பட்டு வருகிறது.இதே போல், சென்னை மாநகர பஸ்கள் 3,200, கும்பகோணம், சேலம், கோயம்புத்துார் அரசு போக்குவரத்துக் கழகம் என மொத்தம், 8,200 டவுன் பஸ்களில் இந்த சட்டம் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இரண்டு மாதங்களுக்குள் அனைத்து பஸ்களிலும் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.