மூன்று கவுன்சிலர்கள் பதவி பறிப்பு நடவடிக்கையால் மற்றவர்கள் கலக்கம்
தன்னிச்சையான நடவடிக்கை, அதிகாரிகள் மீது பாய்ச்சல் என, சென்னையில் ஆட்டம் போட்ட, தி.மு.க., கவுன்சிலர்கள் இருவர் உட்பட மூன்று பேரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. தங்கள் மீதும் நடவடிக்கை பாயுமோ என மற்ற கவுன்சிலர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணிகள் நடந்துவருகின்றன. இதில் அதிக கமிஷன் கேட்டு பணிகளை நிறுத்தியது, ஒப்பந்த ஊழியர்கள் மீது தாகக்குதல், அதிகாரிகளை மிரட்டுதல் என, பல்வேறு புகார்கள் முதல்வர் வரை சென்றன.இவ்வாறு புகாரில் சிக்கிய, திருவொற்றியூர், மணலி, அம்பத்துார், கோடம்பாக்கம், வளசரவாக்கம், பெருங்குடி மண்டலங்களைச் சேர்ந்த, 13 கவுன்சிலர்களுக்கு, 'உங்கள் பதவியை ஏன் பறிக்கக்கூடாது' என விளக்கம் கேட்டு, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கார்த்திகேயன் நோட்டீஸ் அனுப்பினார்.இதற்கு, கவுன்சிலர்கள் விளக்கம் அளித்தனர். அமைச்சர் நேருவும், சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களை அழைத்து எச்சரித்திருந்தார்.இந்நிலையில், எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் கவுன்சிலர்கள் பலர், தொடர்ந்து அட்டாகசம் செய்வதாக புகார்கள் வந்தன.இதையடுத்து, திருவொற்றியூர் மண்டலத்தில், ஐந்தாவது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம், பெருங்குடி மண்டலத்தில், 189 வார்டு கவுன்சிலர் பாபு ஆகிய இருவரும், நேற்று முன்தினம், கவுன்சிலர் பதவியில் இருந்து நீக்கி, அரசு உத்தரவு பிறப்பித்தது.இதில் சொக்கலிங்கம், தற்போதைய திருவொற்றியூர் எம்.எல்.ஏ., - கே.பி.சங்கரின் சகோதரர். அதேபோல், தாம்பரம் மாநகராட்சியில், மூன்றாவது மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப்பும் நீக்கப்பட்டுள்ளார்.அ.தி.மு.க.,வில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஆட்டம்போட்ட கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் அதிரடியாக நீக்கப்படுவது வழக்கம். தி.மு.க.,வில் அதுபோன்ற நடவடிக்கை பெரிதாக எடுக்கப்படுவதில்லை.தற்போது, அதிரடியாக ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளதை, அக்கட்சியினரே எதிர்பார்க்காத ஒன்றுதான்.இதனால், தற்போது வரை வார்டுகளில் கொட்டம் அடித்து வரும் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் பலரும், தங்கள் மீது நடவடிக்கை பாயுமோ என்று கலக்கம் அடைந்துள்ளனர்.
பதவி பறிப்பு ஏன்?
மாநகராட்சி ஐந்தாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சொக்கலிங்கம். இவர், திருவொற்றியூர் நெய்தல் நகரில், மழை பெய்தபோது, தார் சாலை அமைக்கும் பணி நடந்தது. மழையின்போது சாலை அமைத்தால் தரமாக இருக்காது என, கவுன்சிலர் சொக்கலிங்கம், அதிகாரிகளிடமும், ஒப்பந்ததாரிடமும் தகராறு செய்தார்அப்போது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒப்பந்ததாரரை தாக்கியதாகவும், மண்டல அதிகாரிகளை தரமற்ற வகையில் திட்டியதாகவும் கூறப்படுகிறது.கமிஷன் கேட்டு தகராறு செய்ததாக புகார்கள், முதல்வர் வரை பறந்ததாலும், பதவி பறிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.கடந்த ஆண்டில், இந்த கவுன்சிலரின் அண்ணன் கே.பி.சங்கர் எம்.எல்.ஏ., மகன் திருமண விழாவில், முதல்வர், துணை முதல்வர் பங்கேற்றனர். இவரது குடும்பத்தினரை வெகுவாக பாராட்டி, முதல்வர் பேசியிருந்தார். இதனால், கட்சியில் முக்கியத்தும் கிடைத்துவிடுமோ என எதிர்கோஷ்டியினர் செய்த உள்ளடி வேலையில், பதவி பறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.பெருங்குடி மண்டலம், 189வது வார்டில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாபு. இவர், மாநகராட்சி விளையாட்டு திடலை பூட்டி, 'ஸ்போர்ட் அகாடமி' என பெயர் வைத்து, வாடகை வசூலித்தாக குற்றம்சாட்டு எழுந்தது. பத்து லோடு மண் கேட்டு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதாகவும் புகார் உள்ளது. அடுத்தடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால், பதவி நீக்கப்பட்டுள்ளார்தாம்பரம் மாநகராட்சி, 40வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரதீப். சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மண்டலக்குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்ட, தி.மு.க., வேட்பாளரை தோற்கடித்து, மூன்றாவது மண்டல குழு தலைவரானார்.கவுன்சிலர்களை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார்; தங்கள் வார்டுகளை திட்டமிட்டு புறக்கணிக்கிறார்; மண்டலக்குழு கூட்டத்தையும் நடத்தவில்லை என, தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றம் சாட்டிவந்தனர். அதிகாரிகளை மதிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதற்கேற்ப, 2024, அக்., 1 மாலை, உதவி செயற் பொறியாளர் ரகுபதியின் அறையை, ஜெயபிரதீப் பூட்டு போட்டார். திறக்க சென்ற அதிகாரிகளை தகராறு செய்து தடுத்தார். இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததை எடுத்து, ஜெயபிரதீப் மீது, சேலையூர் போலீசில் மாநகராட்சி அதிகாரிகள் புகார் அளித்தனர். காவல் நிலையத்தில் சரணடைந்த ஜெயபிரதீப், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.